ரத்தத்தின் ரத்தமே... - 38

"நமது உடலிலுள்ள ரத்தத்தை சுத்தப்படுத்த வெளிநாட்டில் ஏதோ மெஷின் இருக்கிறதாமே? சொல்லுங்க டாக்டர் வெளிநாடு சென்று ரத்தத்தை சுத்தம் செய்து கொண்டு வருகிறேன்' என்றார் ஒருவர் என்னிடம்.
ரத்தத்தின் ரத்தமே... - 38


"நமது உடலிலுள்ள ரத்தத்தை சுத்தப்படுத்த வெளிநாட்டில் ஏதோ மெஷின் இருக்கிறதாமே? சொல்லுங்க டாக்டர் வெளிநாடு சென்று ரத்தத்தை சுத்தம் செய்து கொண்டு வருகிறேன்' என்றார் ஒருவர் என்னிடம்.

"சுத்தப்படுத்தும் மெஷின் என்றெல்லாம் தனியாக ஒன்றும் இல்லை. அப்படி ரத்தத்தை சுத்தப்படுத்தும் மெஷின் என்று ஒன்றிருந்தால் மனிதர்கள் எல்லோரும் இஷ்டம் போல் சாப்பிடுவார்கள். இஷ்டம் போல் நடந்து கொள்வார்கள். நம்மூரிலிருந்து பணக்காரர்கள் நிறைய பேர் வெளிநாடு கிளம்பிவிடுவார்கள்' என்று சொன்னேன்.

"எனது ரத்தம் சுத்தமாக இருக்கிறதா இல்லையா? எப்படி தெரிந்து கொள்வது? ரத்தத்தை உடலிலிருந்து வெளியே எடுத்து சுத்தம் செய்துவிட்டு மறுபடியும் உடலுக்குள் ஏற்றிவிட முடியாதா?'என்று பதில் சொல்லமுடியாத சில கேள்விகளை என்னிடம் ஒருவர் கேட்டார்.

தினமும் காலையிலிருந்து இரவு வரை நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள். எல்லா வேலைகளையும் ஒழுங்காக சரியாக செய்கிறீர்கள். ஒழுங்காக பசி எடுக்கிறது. ஒழுங்காக சாப்பிடுகிறீர்கள். தினமும் உங்களால் ஒழுங்காக உடற்பயிற்சி செய்ய முடிகிறது. நன்றாக தூங்க முடிகிறது. தினமும் இயற்கை கடன்கள் சரிவர நடக்கிறது. நோய் நொடி எதுவும் வரவில்லை என்றாலே உங்களது உடல் நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறது. உங்களது ரத்தமும் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருக்கிறது என்று அர்த்தம்.

நமது உடலில் தினமும் சேரும் விஷப்பொருள்கள் நச்சுப் பொருள்கள் கழிவுப் பொருள்கள் அவ்வப்பொழுது உடலை விட்டு வெளியேறியாக வேண்டும். இவைகள் ஒழுங்காக உடலைவிட்டு வெளியேறவில்லை என்றால் உடலிலுள்ள ரத்தம் சுத்தம் இல்லாமல் போய்விடும். ரத்தம் சுத்தமாக இல்லையென்றால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாகப் பாதிக்கப்படும். சோர்வு, தலைவலி, சுறுசுறுப்பு இல்லாமை, அலர்ஜி அதாவது ஒவ்வாமை, நோயெதிர்ப்புச் சக்தி குறைபாடு முதலியவை ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும். உதாரணத்திற்கு செரிமானக் குறைபாட்டை எடுத்துக் கொள்வோம்.

விலங்குகளுக்கு தான் சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணம் ஆகவில்லையென்றால் அது தான் சாப்பிட்ட உணவை கக்கி வெளியே எடுத்து விடும். அல்லது பட்டினி கிடக்கும். உடல் நலமில்லாத ஒரு நாயின் எதிரில் பிரியாணியை வைத்தால் கூட அது தொட்டுக்கூடப் பார்க்காது. விலங்குகளிடம் இருக்கும் இந்தப் பழக்கம் மனிதர்களிடம் கிடையாது. அப்பொழுதுதான் வீட்டில் நன்றாக சாப்பிட்டு வந்திருப்பார். ஆனால் ஆசையான பிடித்தமான ஒரு உணவு இலவசமாகக் கிடைக்கிறதென்றால் மறுபடியும் உட்கார்ந்து நன்றாக சாப்பிடுவார். அப்புறம் வயிறு வலிக்குதே ஜீரணம் ஆகவில்லையே என்று புலம்புவார். அது விலங்குகளின் பழக்கம். இது மனிதர்களின் பழக்கம்.

உங்களது ரத்தம்தான் உங்களது உடலுக்குள் நுழையும் நல்ல பொருள்கள் கெட்ட பொருள்கள் ஆகிய எல்லாப் பொருள்களையும் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் கொண்டு போய்ச் சேர்க்கிறது. உங்களது உடலிலுள்ள மிக முக்கிய உறுப்புகளாகிய கல்லீரலும் சிறுநீரகமும் உடலில் சேரும் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் வேலையையும் ரத்தத்தை சுத்தம் பண்ணும் வேலையையும் எந்நேரமும் செய்துகொண்டே இருக்கின்றன. கல்லீரல் நாம் சாப்பிடும் உணவை எரிசக்தியாக மாற்றி உடலுக்குக் கொடுக்கிறது. இதோடு, விஷப்பொருள்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உலோகப் பொருள்கள் சில மருந்துகள் சில கெட்ட பொருட்கள் முதலியனவற்றை தீங்கில்லாத பொருள்களாக மாற்றி அவைகளை நமது உடலிலிருந்து வெளியேற்றிவிடுகிறது.

கல்லீரல் போலவே, சிறுநீரகங்களும் ரத்தத்திலுள்ள நச்சுப் பொருள்களை வடிகட்டி, பிரித்தெடுத்து, சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றது. இதுபோக, நமது உடலிலுள்ள குடல், தோல், மண்ணீரல், நிணநீர் அமைப்புகள் போன்றவைகளும் இயற்கையாகவே உடலிலிருந்து நச்சுப் பொருள்களை வெளியேற்ற உதவி செய்கின்றன. ஆகவே ரத்தத்தை சுத்தம் செய்ய, ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேறு எந்த நாட்டுக்கும் நாம் போக வேண்டிய தேவையில்லை. வேறு எந்தக் கடையிலும் போய் நாம் எதுவும் வாங்க வேண்டிய தேவையில்லை. நமது உடலே நமக்கு போதும்.

ஆனால, ஒழுங்கான ஆரோக்கியமான சத்தான, சுத்தமான, சரிவிகித சத்துணவுகளை சரியாக சாப்பிட்டு, நமது உடலை சரியாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும். அப்பொழுதுதான் உடலும் சுத்தமாக இருக்கும். ரத்தமும் சுத்தமாக இருக்கும். சில குறிப்பிட்ட உணவுப் பொருள்களை அடிக்கடி நாம் சாப்பிட்டு வந்தால், நமது உடலிலுள்ள ரத்தம் சுத்தமாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும். ரத்தத்திலுள்ள செல்களில் மிக அதிக அளவில் இருக்கக்கூடியதும் இருக்க வேண்டியதும் ஆர் பி சி என்று சொல்லப்படும் சிவப்பணுக்கள்தான்.

நமது உடல் சுமார் 2 மில்லியன் அதாவது இருபது லட்சம் சிவப்பணுக்களை ஒவ்வொரு விநாடியும் உற்பத்தி செய்கிறது. சிவப்பணுக்கள் உடலிலுள்ள எலும்புகளின் மஜ்ஜையில் தான் உற்பத்தி ஆகிறது. பின் இவைகள் ரத்தத்தில் சேர்க்கப்பட்டு, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் போய்ச் சேர்ந்துவிடுகிறது. சுமார் 120 நாள்கள் அதாவது சுமார் நான்கு மாதங்கள், ரத்தக் குழாய்கள் வழியாக உடலின் மூலை முடுக்கு எல்லா இடங்களுக்கும் பயணம் செய்கிறது. அதன்பிறகு, இந்த சிவப்பணுக்கள் கல்லீரலை சென்றடைந்து அங்கு அழிக்கப்படுகிறது.

சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துவிட்டால், அனீமியா அதாவது ரத்த சோகை ஏற்பட்டுவிடும். சிவப்பணுக்கள் தான் உயிர்வாழ தேவையான ஆக்ஸிஐனை, உடல் முழுக்க கொண்டு சேர்க்கும். சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டால், உடலுக்கு ஆக்ஸிஐன் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். குறைந்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்க, இரும்புச்சத்து அதிகமாகவுள்ள சில உணவுப்பொருள்களை, நாம் அதிகமாக தினமும் நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகமாகும்.

அனீமியா பலவிதம். ஓவ்வொன்றும் ஒருவிதம். அனீமியா என்றழைக்கப்படும் ரத்த சோகையில், நல்ல, ஆரோக்கியமான சிவப்பணுக்கள் ரத்தத்தில் தேவையான அளவு இல்லாமற் போய்விடும். ரத்தசோகை சிலபேருக்கு தற்காலிகமாக ஏற்பட்டு, பின் சரியாகிவிடும். சிலபேருக்கு எப்பொழுதுமே உடலில் இருக்கும். சிலபேருக்கு மிகவும் குறைவான அளவில் பாதிப்பை உண்டாக்கும். சிலபேருக்கு உயிரையே போக்கக்கூடிய அளவுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.

உடல் தளர்வு, அதிக சோர்வு, அடிக்கடி கை கால்கள் ஜில்லென்று போய்விடுதல், தலைவலி, தலைசுற்றல், சீரற்ற, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு, லேசான நெஞ்சுவலி, தோல் வெளுத்துப் போதல், லேசான மூச்சுத் திணறல், காதிற்குள் புயல் காற்று, விட்டுவிட்டு அடிப்பது போல் சப்தம் கேட்பது, போன்ற அறிகுறிகள் ரத்த சோகையினால் பாதிப்படைந்தவர்களுக்கு இருக்க வாய்ப்புண்டு. ரத்த சோகை, பல பாதிப்புகளை, பல கோளாறுகளை உடலில் ஏற்படுத்திவிடும். அதனால் ரத்த சோகை ஏற்படுகிறது என்று தெரிந்தால், ஆரம்பத்திலேயே அதை சரிசெய்ய, சிவப்பணுக்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவியாய் இருக்கும் சில குறிப்பிட்ட செடி, கொடி, காய், கனி, இலை, தழை, கீரை, தண்டு போன்ற உணவுப் பொருள்களை, அன்றாட உணவில் அதிகமாகச் சேர்க்க வேண்டும்.

இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுப்பொருள்களாகிய சிவப்பு கீரை வகைகள், பச்சை கீரைகள், சுருண்ட இலைகளையுடைய கோசுக்கீரை வகைகள், ப்ருன்ஸ் பழம், காய்ந்த திராட்சை, காய்ந்த பட்டாணி, கம்பு, சோளம், திணை, கேழ்வரகு, சுண்டல், மூக்குக்கடலை, பட்டர் பீன்ஸ், கருப்புகண் பட்டாணி, மங்களூர் பீன்ஸ், முட்டையின் மஞ்சள் கரு முதலியவைகளில் தினமும் ஏதாவதொன்றை சமைத்து சாப்பிட வேண்டும்.

போலிக் அமில சத்து அதிகமுள்ள உணவுப் பொருள்களாகிய செறிவூட்டப்பட்ட ரொட்டி, செறிவூட்டப்பட்ட தானியங்கள், பருப்பு வகைகள், பட்டாணி வகைகள், கொட்டைகள், முளைகட்டிய பயறு வகைகள், முட்டைகோஸ் முதலியவைகளில் ஏதாவதொன்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் டி 12 சத்து அதிகமுள்ள மீன், பால், மாட்டிறைச்சி, முட்டை மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் முதலியவைகளில் ஏதாவதொன்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தாமிரச்சத்து அதிகமுள்ள அவரை, செர்ரி பழங்கள், கொட்டைகள், கிளிஞ்சல்கள், மத்திமீன், ஈரல், கோழி, வாத்து போன்ற வளர்ப்புப் பறவைகள் முதலியவைகளில் ஏதாவதொன்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி சத்து அதிகமுள்ள, கீரை வகைகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், தர்பூசணி, திராட்சைப்பழம், பாகற்காய், சிவப்பு மிளகு, பழச்சாறு கலந்த பானம் முதலியவைகளில் ஏதாவதொன்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுபோக,

1.ப்ராக்கோலி காய்கறி-ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ள காய்கறி இது. ரத்தத்தை சுத்தப்படுத்துவதில் இதன் பங்கு அதிகம்.
2. முட்டைகோஸ்-வேகவைத்தோ ஜுஸ் ஆக்கியோ சாப்பிடலாம்.
3. காலிஃபிளவர்-குளோரோபில் என்னும் பொருள் அதிகமுள்ள இதை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
4. பாகற்காய்-கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் தினமும் சாப்பிட சாப்பிட உடல் நலம் இனிப்பாக மாறும்.
5. வேப்பிலை-தண்ணீரில் போட்டு கொதிக்க
விட்டு அந்த நீரை வடிகட்டி வாரத்துக்கு இருமுறை குடிப்பது நல்லது.
6. பூண்டு-நச்சுப் பொருள்களை
வெளியேற்றிவிடும். தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும்.
7. கேரட்-வெறும் வயிற்றில் கேரட் ஜுஸ் குடிப்பது நல்லது
8. எலுமிச்சம் பழம்-ரத்தத்தை சுத்திகரிக்க மிகவும் உதவி செய்யும்.
9. அன்னாசிப் பழம்-இதுவும் ரத்தத்தை சுத்தப்படுத்துவதில் அதிக பங்கு வகிக்கிறது.
10. இஞ்சி-இஞ்சிச் சாறு வெறும் வயிற்றில் தேனுடன் சேர்த்துக் குடிப்பது நல்லது.
11. புதினா கீரை ஜுஸ் மிகமிக நல்லது.
12. நெல்லிக்காய்-ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது.

மேற்கூறிய உணவுப்பொருள்களை மாற்றி, மாற்றி, ஏதாவதொன்றை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நமது உடலிலுள்ள ரத்தம் சுத்தமாகும். சுத்தமாக்கப்படும். நாமும் ஆரோக்கியமாக வாழலாம்.

-தொடரும்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com