தோல்விகளே தத்துவங்களை உருவாக்குகின்றன!

"பயணங்களே அற்புதம்! ஏனென்றால் தேங்கி நிற்கிற குளம்... எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதில் அழுக்குதான் இருக்கும். ஓடுவது சின்ன ஓடையாக இருந்தாலும்,
தோல்விகளே தத்துவங்களை உருவாக்குகின்றன!

"பயணங்களே அற்புதம்! ஏனென்றால் தேங்கி நிற்கிற குளம்... எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதில் அழுக்குதான் இருக்கும். ஓடுவது சின்ன ஓடையாக இருந்தாலும், அந்தத் தண்ணீர் கண்ணாடியாகி விடும். வாழ்க்கையில் எந்த இடத்திலும் இதுதான் என் இடம் என நின்று விடக் கூடாது என்பது என் தீர்மானம். வெகு நேரம் பயணம் செய்யும் போது, சற்று அலுப்பு வரலாம். ஆனால் அப்போது எடுக்கிற ஓய்வு கூட, ஒரு நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருப்பது போல்தான் இருக்க வேண்டும்.  ஏனென்றால், எந்த ஓய்வும் நம்முடைய அடுத்த பயணத்துக்கான ஆயத்தம்தான். பணம், புகழ், காதல், கல்யாணம், குழந்தைகள் என எல்லாமே இந்த பயணங்கள் மூலமாகத்தான் கிடைத்தது. ஒளிப்பதிவு பட்டியல் எப்போதுமே தேர்ந்த தேர்வாக இருக்கிறதே என்ற கேள்விக்கு ஒளிப்பதிவாளர் பொர்ரா பாலபரணி அளித்த பதில் இது.  எல்லோருக்கும் தெரிந்த பாலபரணி இப்போது பெயர் மாற்றத்துடன் வருகிறார். ரசனையும், தீவிரமும் இவரது தனி பாணி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்திய சினிமா முழுமைக்கும் பயணிக்கும் படைப்பாளி. "மாயாண்டி குடும்பத்தார்', "கோரிப்பாளையம்' படங்கள் இவரது பாணி தமிழில் சற்று வித்தியாசமானது. இப்போது "ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.

மொழி, நிலம் கடந்த சினிமா பயணம்... எப்படியான உணர்வு....

பயணங்களின் பேரற்புதம் அது.  மறுபடியும் கண்டடைய முடியாத மனிதர்கள். முகங்கள், சொற்கள், நினைவுகள், காட்சிகள், உணர்வுகள்.... என்னை ஒவ்வொரு முறையும் மீள் உருவாக்கம் செய்பவை பயணங்கள்தான். பயணங்களில் யாரோ நீட்டுகிற ஒரு வாட்டர் பாட்டில், புளியதோரைப் பொட்டலம், ஒரு புன்னகை, விசாரிப்பு, சிநேகம், காதல் எல்லாவற்றுக்குமே ஒரு காவியத் தன்மை வந்து விடுகிறது. என் வாழ்க்கையில் சரி பாதி பொழுதுகள் பயணங்களுடன்தான் கழிந்திருக்கின்றன. விதவிதமான காட்சிகள் படிமங்களாக மனதில் கிடக்கின்றன. கவலைகளையும் எதிர்காலம் குறித்த பதற்றங்களையும் கடக்க முடியாத பிரிவுகளையும், துடைத்து வீசி விட ஒரே ஒரு புதிய நிலப்பரப்பின் காட்சியில் முடிந்து விடுகிறது. பயணத்தின் போதுதான் வெயிலும் மழையும், ஒளியும் இருளும், புதிதாக இருக்கின்றன. என் மனம் எதை நேசிக்கிறதோ, அது கதையின் ஒளியாக வருகிறது அவ்வளவுதான். பயணங்களில்தான் ஒரு அபூர்வம் நிகழ்கிறது.  

ஒளிப்பதிவுக்கான சுவாரஸ்யங்கள் எப்படி இருக்கும்...

திரைக்கதைதான் முதல் சுவராஸ்யம். அதை காட்சிகளாக மாற்றுவதில் தொடங்குகிறது அடுத்த சுவாரஸ்யம். ஒரு படத்தின் உருவாக்கத்தில் இருக்கும் சந்தோஷமான பகுதியும் அதுதான். இத்தனை வருட பயணம், இத்தனை படங்கள் என பயணித்து வந்த போதிலும், ஒளியின் சூட்சுமமே புரியவில்லை. காற்று, ஒளி, தண்ணீர் எல்லாம் ஒரு சேர சேர்ந்தால் விதை துளிர்க்கும்.   ஒரு காட்சியில் நாம் பயன்படுத்தும் ஒளியின் அளவு கொஞ்சம் கூடினாலும் காட்சியின் தன்மை மாறி விடுகிறது.  ஒரு காட்சியை சினிமாவாக்க நிறைய வழிகள் இருக்கும். ஆனால், அது எல்லாவற்றையும் செய்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படி செய்தால் எந்த சுவாரஸ்ய புள்ளியையும் தரிசிக்க முடியாது. காட்சிப்படுத்த எது சிறந்த வழி என்பதை பார்த்து ஆராய்ந்து எடுக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி.  ஒரு நல்ல திரைக்கதைதான் கேமிராவின் தன்மையைத் தீர்மானிக்கிறது. அதன் பின் இயக்குநருக்கும், கேமிராமேனுக்கும் மத்தியில் இருக்கிற புரிதல். அது மட்டும் இருந்தால்,  உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல எளிமையானது அது.

"மாயாண்டி குடும்பத்தார்' மாதிரியான படங்கள் தந்த விலாசம் இருக்க, தமிழில் தொடர்ந்து இயங்காதது ஏன்...

பல மொழிகள் இருந்தாலும், எனக்கான ஒரே மொழி சினிமாதான்.  என் உலகமே அதுதான். ஒரு இருக்கையில் கட்டிப் போட்டாலும், சினிமாதான் மன ஓட்டமாக இருக்கும். அது என் இயல்பு. ஏதோ ஒரு விபத்தில் சினிமா ஒளிப்பதிவு கலைக்கு வந்தவன் அல்ல நான். விரும்பி ஏற்றுக் கொண்டது. என் உயரமும் இதுதான்... என் தாழ்வும் இங்கேதான் என்று தீர்மானித்து வந்தவன். பணியாற்றுவது குறைந்து போனதற்கு காரணம், கதைகள்தான். ஒரு கதை என்னை ஈர்க்க வேண்டும். எந்த ஒப்பனையும் இன்றிப் பார்ப்பது. நமது வாழ்க்கையின் உண்மைகளை ஒளிவுமறைவின்றித் தரிசித்து அப்படி தரிசிக்கும் உண்மைகளை அழகுணர்ச்சியுடன் சித்தரித்து அதையே உணர்வு பூர்வமாகவும் சொல்லி விட்டால் அது நல்ல சினிமா. அப்படியான சினிமாக்கள்தான் என் தேர்வு. மறைந்த ராசுமதுரவன் அப்படி ஒரு இடம் தந்தார்.  என் பயணத்தில் சில தவறான படங்களும் இருப்பதால்தான், என் அனுபவங்கள் பெரிதாகிறது. என் வாழ்க்கைக்கு நிறைய அர்த்தங்கள் வருகிறது. சில நேரங்களில் இங்கே என்ன மாதிரியான படங்கள் செய்ய வேண்டும் என்ற குழப்பமும் வரும். அதனால்தான் தொடர்ச்சியாக பார்க்க முடியவில்லை. எப்போதும் ஒளிப்பதிவு, கேமிரா, வெளிச்சம் என்றுதான் மனசுக்குள் அலை அடிக்கும். ஒரு இடைவெளியில் வந்த வாய்ப்புதான் இப்போது "ஆனந்தம் விளையாடும் வீடு'. தோல்விகள்தான் இங்கே தத்துவங்களை உருவாக்குகிறது.

தமிழ் சினிமா ஒளிப்பதிவுகளில் கவர்ந்தவர்கள் யார்...

ஒவ்வொரு ஒளிப்பதிவாளரும் ஓர் இயல்பு, ஒரு தெளிவு உண்டு. ஒரு ஒளிப்பதிவாளருக்கு அழகு, இயக்குநரோடு ஒன்றி போய் கதை செய்வது மட்டும்தான்.  அதைப் புரிந்துக் கொண்டாலே நல்ல ரசனையும், தீவிரமும் வெளிவரும். பி.சி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், எம்.எஸ்.பிரபு, ரவி வர்மன், ரத்னவேல்.... இப்படி ஏக கலைஞர்கள். அவர்களின் பொறுப்பு எனக்கு எப்போதும் பிடிக்கும்.  கலைஞனுடைய கனவில் அவனுடைய பங்களிப்பு பாதிதான். ரசிகனின் ஒத்துழைப்பில்தான் நல்ல கனவுகள் நிறைவேறும்.  புதிதாக வந்தவர்கள் பலர் நிறைய நல்ல முயற்சிகளை செய்கிறார்கள்.

அனைவருக்கும் பாராட்டுக்கள்.  வியாபாரம் தாண்டி சினிமாவின் உன்னதத்தை புரிந்துக் கொள்வதும் இங்கே முக்கியம். ரசிகர்களை சொல்லி குற்றமில்லை. நாம்தான் தயாராக வேண்டும். ஏனென்றால், சுனாமி வந்து லட்சக்கணக்கான உயிர்களை குடித்த போதிலும், இங்கே அரங்கு நிறைந்த ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். அதுதான் தமிழ் சினிமாவின் பலம். கரோனா காலமும் மாறும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com