ரத்தத்தின் ரத்தமே... - 32

நமது உடலிலிருந்து, பல இயற்கை வழிகளின் வழியாக ரத்தம் வெளியே வருவதுண்டு.
ரத்தத்தின் ரத்தமே... - 32


நமது உடலிலிருந்து, பல இயற்கை வழிகளின் வழியாக ரத்தம் வெளியே வருவதுண்டு. வடிவதுண்டு. கசிவதுண்டு. சில குறிப்பிட்ட நோய்களில், வாய் வழியாகவும் ரத்தம் வருவதுண்டு. வாயில் ரத்தம் என்றாலே, எல்லோருக்கும் உடனே பயம் வந்துவிடும். வாய் உள்ளேயிருந்து ரத்தம் வருகிறதா அல்லது பல் ஈறுகளிலிருந்து ரத்தம் வருகிறதா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருப்பார்கள். சில குறிப்பிட்ட நோய்களில், வாய் உள்ளேயிருந்து ரத்தம் வருவது போக, பல் இடுக்கு மற்றும் ஈறுகளின் வழியாகவும் ரத்தம் கசிவதுண்டு.

நிறைய பேருக்கு, பெரும்பாலும் காலையில் பல் துலக்கும்போது, ஈறுகளின் வழியாக ரத்தம் கசிவதுண்டு. பல் ஈறுகளெல்லாம் தட்டையாக இல்லாமல் பலூன் மாதிரி ஊதிப்போயிருக்கிறது. வீங்கியிருக்கும் ஈறுகளை விரல் நுனியால் அமுக்கினால் மெதுவாக ரத்தம் வந்து வெளியே எட்டிப் பார்க்கிறது. எனக்கு ரொம்ப பயமா இருக்குது என்பார்கள் சிலர். பல் ஈறு நோய்களின் முதல் அறிகுறியே பல் ஈறுகளிலிருந்து ரத்தம் வடிவதுதான். சில கடினமான உணவுப்பொருள்களைக் கடித்து மென்று சாப்பிடும்போது எதிர்பாராதவிதமாக அந்த உணவுப்பொருள் பல் ஈறுகளில் குத்தி காயப்படுத்தி அதன் மூலமாகவும் ரத்தம் கசிய வாய்ப்புண்டு.

வாய் துர்நாற்றம் இருந்தால் கூட அடுத்து ஈறு ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்புண்டு. வாய் துர்நாற்றம் வருகிறது என்றாலே வாய்ப்பகுதி சுத்தமாக இல்லை என்று அர்த்தம். பற்கள் பல் இடுக்குகள் ஈறுகளில் பிரச்னை இருக்கிறதென்று அர்த்தம். ஸ்கர்வி என்று அழைக்கப்படும் வைட்டமின் சி சத்துக் குறைபாட்டினாலும், பல் ஈறுகளிலிருந்து ரத்தம் கசிய வாய்ப்புண்டு. வைட்டமின் சி சத்துக்குறைவு தானே என்று மெத்தனமாக இருக்காதீர்கள். ரத்தச் சோகை, களைப்பு, அசதி, சோர்வு, திடீர் திடீரென்று ரத்தம் கசிதல், கை, கால் வலி முதலியவைகளை வைட்டமின் சி சத்துக் குறைபாடுகளை உண்டாக்கிவிடும். உள்பக்க - வெளிபக்கப் பல் ஈறுகளில் புண் ஏற்பட்டு பற்களுக்கு பலம் இல்லாமல் போய் சில நேரங்களில் பல் விழுந்துவிடக்கூட வாய்ப்புண்டு. பெண்களுக்கு  கர்ப்ப காலத்தில் ரத்த சோகை ஏற்பட்டால், ஈறுகளிலிருந்து ரத்தம் வடிய வாய்ப்புண்டு.

எப்போதாவது பல் ஈறுகளிலிருந்து ரத்தம் வருகிறதென்றால், பிரெஷ்ஷை வைத்து மிக வேகமாக, மிக அழுத்தி பல் தேய்க்கும்போது ரத்தம் வரலாம் அல்லது செயற்கை பல் செட் மாட்டியிருப்பவர்களுக்கு, பல் செட் சரியாக பல் ஈறுகளின் மேல் பொருந்தாமல், உட்காராமல், அதனால் பல் ஈறுகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசியலாம். ஆனால் அடிக்கடி ஈறுகளிலிருந்து ரத்தம் கசிகிறதென்றால் 

1. பல் ஈறுநோய் தீவிரமாகி இருக்கலாம்.

2. ரத்தப் புற்றுநோய் உள்ளவர்களுக்கு அதன் தாக்கம் அதிகமாகி இருக்கலாம்.

3. முக்கியமான வைட்டமின் சத்துக்கள் குறைந்திருக்கலாம்

4. ரத்தம் உறைவதற்கு மிக மிக உபயோகமாக இருக்கும் பிளேட்லெட் செல்கள் மிகமிகக் குறைவான அளவில் இருக்கலாம்.

ஆ... என்று வாயைத் திறந்தால் அகில உலகமும் தெரிகிறது என்று சிலர் கேலியாகச் சொல்வதுண்டு. ஆனால் அது ஓரளவு உண்மையும்கூட. இந்த உலகில் எவ்வளவு மக்கள் இருக்கிறார்களோ அவ்வளவு எண்ணிக்கையில் 
பாக்டீரியாக் கிருமிகள் நமது வாயில் இருக்கின்றன என்று சொல்வதுண்டு.

அதே மாதிரி ஒருவருடைய விரல் ரேகை போல இன்னொருவருக்கு விரல் ரேகை இருக்காது. ஒருவருக்கொருவர் விரல் ரேகை மாறுபடும். பற்களும் பல் வரிசைகளும் கூட அப்படித்தான். பார்க்க ஒன்று போல இருக்கும். ஆனால் ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும்.

காரசாரமான, கடினமான உணவுப் பொருள்கள், பல் இடுக்குகளில் போய் உட்கார்ந்து கொண்டு கெட்ட பாக்டீரியாக்கள் வளர வாய்ப்பை உண்டாக்கிவிடும். எனவே ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் பேஸ்ட் இல்லாமல் வெறும் பிரெஷ் கொண்டு பற்களை துலக்கிவாய் கொப்பளிப்பது மிகவும் நல்லது. சென்னையிலுள்ள ஒரு மாநில அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது  பாக்கெட்டில் தலைவாருவதற்கு சீப்பையும், பல் துலக்குவதற்கு பிரெஷ்ஷையும் வைத்திருந்தார். "எப்படி இப்படி?' என்று மிகுந்த ஆர்வத்தோடு கேட்டேன். "தலைமுடியை விட பற்களும் வாயும் ரொம்ப ரொம்ப முக்கியம். எது சாப்பிட்டாலும் எப்பொழுது சாப்பிட்டாலும் உடனே பாத்ரூம் சென்று சுத்தமாக பல்லைத் துலக்கிவிடுவேன்'. "பிரெஷ்ஷையும் அலுவலகத்துக்கு கொண்டு வருகிறீர்களே யாரும் இதுவரை உங்களைக் கேலி பண்ணவில்லையா?' என்றேன்.

"இதிலென்ன இருக்கிறது. என் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது என்னுடைய கடமை. அடுத்தவர்களுக்காக நான் வாழவில்லை. எனக்காக நான்  வாழ்கிறேன்' என்று மிகத் தெளிவாக மிகப் பொறுமையாக பதிலளித்தார். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிகரெட் புகைப்பவர்களுக்கு, வாயின் உட்புறங்களில் கெட்ட பாக்டீரியாக் கிருமிகள் வளர வாய்ப்பு அதிகம். எனவே சிகரெட் உபயோகிப்பவர்களே சிகரெட்டின் எண்ணிக்கையைக் குறையுங்கள்.

பல் இடுக்குகளில் பற்படலம் அதாவது காறை என்று சொல்லப்படும் அழுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக படிய ஆரம்பிக்கும். பின் பல்லின் நிறம் மாறும். அந்தக் காறைப் படலத்தில் கெட்ட பாக்டீரியாக்கள் போய் உட்கார்ந்து கொண்டு, எண்ணிக்கையில் அதிகமாகி, பற்களையும், பல்லின் இடுக்குகளையும், ஈறுகளையும் மெதுமெதுவாகத் தொந்தரவு செய்ய ஆரம்பிக்கும். நீங்கள் தினமும் ஒழுங்காக பல் துலக்கவில்லையென்றால், இந்த கெட்ட பாக்டீரியாக்கள். பற்களைச் சிதைத்து, ஈறுகளை கெடுத்து, ஈறுகளில் நோயை உண்டாக்கி, வாய் துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்து, கடைசியில் பற்களை ஒன்றன் பின் ஒன்றாக இழக்கச் செய்துவிடும்.

நிறைய உடல் நோய்கள், பற்களையும், வாய்ப் பகுதியின் சுகாதாரத்தையும் பொறுத்தே அமைந்திருக்கிறது. பற்களில் ஏதாவது பிரச்னை என்றால், உடலில் பிரச்னை இருக்கும். உடலில் ஏதாவது பிரச்னை என்றால், பற்களில் பிரச்னை இருக்கும். கெட்டுப்போன, நோய்வாய்ப்பட்ட, ஒன்றுக்கும் உதவாத ஒரு பல்லை பிடுங்கினால்,  ரத்தத்தில் கூடுதலாக இருந்த சர்க்கரையின் அளவு உடனே குறைந்துவிடும். தலைமுடிக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதே என்று சொல்வார்கள். ஆனால் பற்களைப் பொறுத்தவரை இந்தப் பழமொழி தவறு. கெட்டுப்போன பற்களைப் பிடுங்கி எறிந்து விட்டால், உடலில் பல நோய்கள் குணமாகிவிடும்.

உங்கள் பல் ஈறுகளிலிருந்து ரத்தம் கசிகிறது என்றாலே, நீங்கள் பற்களையும், ஈறுகளையும், வாய்ப்பகுதியையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம். பற்கள் மற்றும் ஈறுகள் பராமரிப்பு மிகமிக முக்கியம்.

1. ஐஞ்சிவைட்டிஸ் (அதாவது பல் ஈறு கசிவு நோய்) 
2. "பெரிஓடன்டைட்டிஸ்' (அதாவது 

பற் புறத்திசு நோய்) இவ்விரண்டு நோய்களும் தான் பற்களைச் சுற்றியுள்ள ஈறு மற்றும் எலும்பைப் பாதித்து நோயை உண்டாக்கி ஈறுகள் மற்றும் பற்கள் அதிக கூச்சம் ஏற்படவைத்து ரத்தக்கசிவையும் உண்டாக்கிவிடும். பல் இடுக்குகளிலும் பல் ஈறும் பல்லும் சந்திக்கும் இடத்திலும் காறை கறை அழுக்கு போன்றவற்றுடன் கெட்ட பாக்டீரியாக்களும் சேர்ந்துபோய் வாயையே சுத்தமாக வீணாக்கிவிடுகிறது.

தினமும் குறைந்தது இரண்டு வேளை பற்களைத் துலக்குவதால் பல் இடுக்குகளில் உணவுத்துகள்கள் சேர வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. காறைகள் படிய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

பல் துலக்கி முடித்த பின் விரல்களைக் கொண்டு ஈறுகளின் மேல் நன்றாக மெதுவாக ஒவ்வொரு பல்லை ஒட்டியிருக்கும் ஈறுகளையும் நன்றாக மசாஜ் செய்தால் பற்களும் வலுவாகும். ஈறுகளுக்கும் ரத்த ஓட்டம் நன்றாகக் கிடைக்கும். அதனால் ஈறுகளிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படவும் வாய்ப்பில்லாமல் போய்விடும்.

தினமும் பல் துலக்கிய பின் அல்லது இரவு படுக்கப் போகும் முன் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கரைத்து நன்றாகக் கொப்பளிக்க வேண்டும்.

கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று கொண்டிருந்தால் பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஓரளவு தவிர்க்கலாம். கிராம்பு எண்ணெய்யை ஈறுகளின் மேல் தேய்ப்பது பற்களுக்கும் ஈறுகளுக்கும் நல்லது.

பேக்கிங் சோடா பவுடர் நம் வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். இந்தப் பவுடரை மிகக் குறைவான அளவில் விரலில் தொட்டு ஈறுகளின் மேல் நன்றாக அழுத்தி தேய்த்தால் வாய்ப்பகுதி அமிலத்தன்மை கொண்டதாக மாறி வாயிலும் ஈறுகளிலும் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை கொன்றுவிடும்.

எலுமிச்சை, ஆரஞ்சு, முட்டைகோஸ், ப்ராக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, உருளைக்கிழங்கு, கீரைகள், தக்காளி ஜீஸ், கிவி பழம், கொய்யாப் பழம், காலிபிளவர், குடமிளகாய், பப்பாளி, பாகற்காய், முளை கட்டிய பயறுகள் முதலியவைகளை அவ்வப்பொழுது சாப்பிட்டு வந்தால், உடலில் வைட்டமின் சி சத்தும் கூடும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவையும் தடுக்கலாம்.

காய்கறிகளை வேகவைத்து வறுத்து பொறித்து வதக்கி சாப்பிடுவது என்பது நம்முடைய பழக்கவழக்கமாக இருந்தாலும் சில குறிப்பிட்ட பச்சைக் காய்கறிகளை கடித்து நன்றாக மென்று தின்பது உடலுக்கு மிகவும் நல்லது. இந்த மாதிரி பச்சைக் காய்கறிகளை அப்படியே கடித்து மென்று தின்பதனால் பற்கள் வெள்ளை வெளேரென்று பளிச்சென்று ஆகும். பற்கள் சுத்தமாகும். ஈறுகள் பலமாகும். அதனால் ஈறுகளுக்கு நன்றாக ரத்த ஓட்டம் கிடைக்கும். 

ஒருவரை சந்திக்கும்போது, முதலில் முகம் அடுத்தது கண்களையும் பற்களையும் தான் பார்க்கத் தோன்றும். முதல் பார்வையிலேயே, ஒருவனின் அல்லது ஒருத்தியின் பல் வரிசை கவர்ச்சியாக இருக்கிறதா, அழகாக இருக்கிறதா, அழகாக சிரிக்கிறாரா?  என்பதைப் பொறுத்துத்தான், அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அழகான வரிசையான பற்கள் இயற்கையாக ஒருவருக்கு கிடைப்பது என்பது ஒரு வரப்பிரசாதமே. பற்கள் ஒழுங்காக, வரிசையாக ஒரு பெண்ணுக்கு அமைந்து, அந்த மொத்தப் பற்களிலும் ஒரு அழகான, கள்ளங்கபடமில்லாத புன்னகையும் வெளிவந்தால், நாடாளும் அரசரும் நான்கு நிமிடம் நின்று, பார்த்துவிட்டு சந்தோஷமாக செல்வார்.

வாய்ப்பகுதியையும், பற்களையும், ஈறுகளையும் எந்நாளும் சுத்தமாக, பாதுகாப்பாக, ஆரோக்கியமாக வைத்திருந்தால், பற்களிடையே ஊறிய நீர், அதாவது உமிழ்நீர், அதாவது எச்சில் திரவம், எந்நாளும் தேனும், பாலும் கலந்த 
கலவைதான்.

  தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com