ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ள "ஆறாம் நிலம்' என்ற படம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. போர் சூழலுக்கு பின் ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலையை படம் பிடித்த விதத்தில் இது கவனத்தை ஈர்த்துள்ளது. எழுதி இயக்கியிருப்பவர் ஆனந்த ரமணன். படம் குறித்து அவர் பேசும் போது... ""அரசியலும், வாழ்க்கையும் ஈழத்தில் இருப்பவர்களை பந்தாடிக் கொண்டே இருக்கிறது. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் நிறைய இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட விஷயம், இன்னும் இந்த உலகத்துக்கு தெரியவில்லை. கடந்த தலைமுறை போய் சேர்ந்து விட்டது. மிஞ்சியவர்கள் எல்லாம் புதியவர்கள். போரை நேரில் பார்க்காத பிள்ளைகள் நிறைய பேர் வந்து விட்டார்கள். அவர்களுக்கு இந்த காலம் தந்திருப்பது இயலாமையும் கோபமும் கையறுநிலையும்தான். இந்த தலைமுறைக்கான இன எழுச்சி என்பது இன்னும் 50 ஆண்டுகளுக்கு கிடையாது. அந்தளவுக்கு அங்கே பாதிப்புகள்.
இப்போது அங்கே என்னென்ன நடக்கிறது என்கிற உண்மையை உருக்கமாக சொல்லியிருக்கிறேன். என் மகனை டாக்டராக்க வேண்டும், கலெக்டராக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களுக்கு மத்தியில, ஈழத்துல மட்டும் "என் மகன் அகதி ஆகணும்' என்று ஆசைப்படுகிறார்கள். அப்படியாவது அவன் எங்கேயாவது உயிரோடு, அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறவனாய் இருந்தால் போதும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய வலி? அந்த வலிகளைத்தான் நான் படமாக கொண்டு வந்து பதிவு செய்திருக்கிறேன்'' என்றார். ஓ.டி.டி தளத்தில் படம் வெளியாகியுள்ளது.