உடலைக் கட்டமைப்பாக வைத்திருக்கப் பயன்படும் கருவிகளில் ஒன்று "ட்ரெட்மில்'. இது மின்சாரத்தால் இயங்குவது. இதில் ரப்பரால் செய்யப்பட தளத்தில் ஏறி நின்று ட்ரெட்மில்லை இயக்கினால் ரப்பர் பெல்ட் நகரத் தொடங்கும். ரப்பர் பெல்ட் நகரும் வேகத்தைக் கூட்டவும் குறைக்கவும் செய்யலாம். இதயத்தில் பிரச்னை உண்டா என்பதைக் கண்டறிய ட்ரெட்மில்லில் வேகமாக நடக்கச் சொல்வார்கள். ரப்பர் தளத்தைத் தவிர ட்ரெட்மில்லில் எல்லா பாகங்களும் உலோகத்தால் செய்யப்பட்டிருப்பவை.
தெலங்கானாவில் மின்சாரம் தேவைப்படாத மரத்தால் செய்யப்பட்ட மாற்று ட்ரெட்மில்லை கண்டுபிடித்துள்ளார். இதனை இயக்க மின்சாரம் தேவையில்லை. ரப்பர் தளத்திற்குப் பதிலாக மரச் சட்டங்களை பிணைத்து செய்துள்ளார். அதன் மேல் நின்று முன்னோக்கி நகரத் தொடங்கியதும் மர தளம் பின்னோக்கி நகரும். அதனால் மின்சாரம் உதவியின்றி இந்த மர ட்ரெட்மில்லில் நடக்கலாம்.
நடப்பவர் எப்படி நடக்கிறாரோ அவரது வேகத்திற்கு தக்கபடி மர தளமும் இயங்கும். மர ட்ரெட்மில் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனாலும் இதை வடிவமைத்தவர் யார் என்று தெரியவில்லை. மர ட்ரெட்மில் கண்டுபிடித்தவரைப் பாராட்ட அவரை கண்டுபிடிக்குமாறு தெலங்கானா கணினித் துறை அமைச்சர் தனது துறை ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா புதிய கண்டுபிடிப்பைப் பாராட்டியதுடன், "எனக்கும் ஒரு மர ட்ரெட்மில் வேண்டும்' என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார்...!