1945-இல் பிரிட்டனோடு சேர்ந்த நேச நாடுகள் கூட்டுப்படையெடுப்பில் பர்மாவை ஜப்பானின் பிடியிலிருந்து மீட்டு மீண்டும் பிரிட்டனின் காலனித்துவ நாடாக்கினார்கள். பர்மாவிலேயே இருப்போம் என்ற முடிவோடு ரங்கூனை விட்டு வெளியேறித் தொலைதூர ஊர்களுக்குத் தமிழர்கள் போய்ச் சேர்ந்தார்கள். ஆனால் அங்கு போன இடங்களில் பர்மிய இளைஞர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி அவர்கள் மனம் நொந்தார்கள். வேறு வழியின்றி அவர்கள் இந்தியா போக கப்பலும் இல்லாததால் மாந்தலே வழியாக இந்தியாவுக்கு நடந்து போக முடிவு செய்து நடந்தார்கள்.
மாந்தலேயிலிருந்து இந்தியாவுக்கு மணிப்பூர் வழியாகத்தான் போக வேண்டும். மாந்தலேயிலிருந்து 100 கி.மீட்டர் தூரத்தில் மணிப்பூர் இருந்தது. ஆனால் பர்மாவிலிருந்து மக்கள் இந்தியாவுக்கு அவ்வழியாக நடக்கத் தொடங்கினார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் பர்மாவில் ஏழைத் தொழிலாளியாகவும், கூலித் தொழிலாளியாகவும் இருந்தவர்கள்.
வசதி குறைந்த காட்டுப்பாதைப் பயணம் ஆயிரக்கணக்கானவர்களைப் பலியெடுத்ததாக நடை
பாதையில் போனவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். பிரபல தமிழறிஞர் வெ.சாமிநாதசர்மா பர்மாவிலிருந்து நடந்து வந்து தனது அனுபவத்தை "எனது பர்மா வழி நடைப்பயணம்' என்று எழுதியிருக்கிறார்.
ரங்கூனில் "ஜோதி' என்ற மாத இதழை நடத்தி வந்தவர் தமிழறிஞர் வெ.சாமிநாதசர்மா. அவர் ஜப்பானியர் ரங்கூன் மீது நடத்திய குண்டுவீச்சுக்குப் பிறகு இனிமேல் பர்மாவில் வாழ முடியாது என முடிவெடுத்துத் தனது மனைவியோடு மாந்தலே வழியாகக் கால்நடையாக இந்தியாவுக்கு புறப்பட்டார்.
1942-பிப்ரவரி 2-ஆம் தேதி ரங்கூனை விட்டு புறப்பட்டவர் பர்மாவில் பல ஊர்களையும் கடந்து துயரங்களை அனுபவித்தும், 51-ஆவது நாளுக்குப் பிறகு நாகர்கள் வாழும் இந்திய ஊரான "வக்சு' என்ற இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.
பிறகு ரயில் மூலமாகச் சென்னைக்குப் போயிருக்கிறார். அவரைப் போலவே சென்னை வானதி பதிப்பக உரிமையாளர் திருநாவுக்கரசு, ஜனசக்தி எழுத்தாளர் அறந்தை நாராயணன் ஆகியோரும் கால்நடையாக இந்தியாவுக்கு வந்தவர்கள்தான்.