முற்றிலும் வணிக மயமாகிப் போய்விட்ட இந்த வாழ்க்கைச் சூழலில் தொழில்நுட்பம் உலகத்தை உள்ளங்கைக்குள் இணைக்கிறது. உலகத் தொடர்புகள் மிக விரைவில் சாத்தியமாகிறது. ஆனால் அருகிலிருக்கும் வீடுகளில் இருப்பவர் யார்? அங்கு என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை.
ஆனால் 'ரீ' படத்தின் கதாநாயகி அப்படி இருப்பவள் அல்ல. அவளது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சத்தம் வருகிறது. அது அவளை அலைக்கழிக்கிறது. அவளைச் சமநிலை இழக்கச் செய்கிறது.
என்ன சத்தம் இந்த நேரம்? பேயின் ஒலியா? மனிதனின் வலியா? என்று அறிய முற்படுகிறாள். இந்நிலையில் எங்கிருந்து சத்தம் வருகிறது அதன் பின்னணி என்ன என்று ஆராய முற்படும்போது பல மர்மங்கள் விரிகின்றன. எதிர்பாராத திசையில் சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன ? அவற்றைப் பற்றிப் பேசும் படம் தான் 'ரீ'. சுந்தரவடிவேல் எழுதி இயக்கியுள்ளார்.
இது கதாநாயகியை மையப்படுத்திய கதை கொண்ட படம். இப்படத்தில் 'ஹர ஹர மகாதேவி' படத்தில் நடித்த காயத்ரி ரமா நாயகியாக நடித்துள்ளார். பாலசந்தரின் ஆஸ்தான எழுத்தாளர் அனந்துவின் தங்கையின் பேரன் பிரசாந்த் ஸ்ரீனிவாசன் நாயகனாக நடிக்கிறார். மதுரையும் மதுரையைச் சுற்றியுள்ள இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கதையின பெரும்பகுதி இரண்டு வீட்டில் நடக்கும் படி உருவாகியுள்ளது.
"சிறு பட்ஜெட்டில் ஆரம்பித்த இந்தப் படம், கணிசமான நடுத்தர பட்ஜெட் நிலைக்குக் கொண்டு சென்று ஒரு முழுமையான தரமான படமாகவும் விறுவிறுப்பான படமாகவும் உருவாகியிருக்கிறது," என்கிறார் இயக்குநர் சுந்தரவடிவேல்.