அன்புக்கான தருணங்கள்...

""நட்பும், ப்ரியமும் அது நிகழ்த்தப்படும் கணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மைகளிலேயே வாழும் ஒருவனின் வாழ்க்கைதான் இந்தப் படம்.
அன்புக்கான தருணங்கள்...


""நட்பும், ப்ரியமும் அது நிகழ்த்தப்படும் கணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மைகளிலேயே வாழும் ஒருவனின் வாழ்க்கைதான் இந்தப் படம். இந்த வரியை இப்போது வாசிக்கிற உங்களை விட, என்னை விட, நம் எல்லோருக்கும் இப்படி ஒரு தருணம் உண்டு. அப்படி முழுக்க முழுக்க அன்பு, நேசம், பாசம் கொண்டு கட்டப்பட்ட வாழ்க்கையை அவ்வளவு அழகாக, அற்புதமாக வாழ முடியாத நிலை வருகிற போது, சாமானியனாக சிலர் எடுக்கும் முடிவுதான் கதை. உறவையும், பிரிவையும் காலம்தான் தீர்மானிக்கிறது. அது செய்யும் மாயங்கள் எதையும் கலைத்து போட்டு விடும். ஆனால், இந்த வாழ்க்கைக்கு நடுவே எப்போது அன்பும், பரிவும் நிரந்தரம். பிரச்னை... நம்மை துரத்திக் கொண்டே வரும்... ஓடினாலும் துரத்தும்.... திரும்பி நின்று பார்த்தால் அது ஓடும்.... இந்த பின்னணிதான் முழு கதையும். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் படம் பார்க்கிற ஒவ்வொருத்தரும் தன் மனசுக்கு நெருக்கமான பெண்களை நினைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும் போய் முடியும். மகத்தான வாழ்வை, அன்பை, கருணையை, காதலை, அவஸ்தையை, பிரிவை, நினைவை முன் வைக்கிற கதை.'' அருமையாக பேசுகிறார் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன். "ஹாஸ்டல்' படத்தின் இயக்குநர்.

கல்லூரி வாழ்க்கையின் இன்னொரு பரிணாம கதையா....?

எல்லாமும்தான். பெண்தான் ஆணுக்கு பெருங்கொடை. பெண்ணின் ஒரு ஸ்பரிஸம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒரு வார்த்தை, உரையாடல் எவ்வளவு நம்பிக்கைகளை அளித்து விடுகின்றன. ஆண்கள் மட்டுமே தங்கியிருக்கும் ஒரு பிரபல கல்லூரி விடுதியில் ஒரு பெண் சிக்கிக் கொள்ளும் நிலை. அந்தப் பெண் அங்கே எதற்காக சென்றாள்... அவள் சொல்ல வந்த வார்த்தைகள் என்ன.... இதுதான் லைன். மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மனப் பக்குவம் கொண்டவர்கள் அந்த மாணவர்கள். அவர்களின் அந்த திக் திக் நிமிடங்கள்தான் திரைக்கதை. வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு கொண்டவர்களை பார்க்கும் போது, அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியாதா என்று தோன்றும். சில விநாடிகள் அந்த வருத்தம் நம்மை தின்று விடும். எல்லாமும் இயந்திரமாகி விட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. கைப்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்களும், பகிரப்படாத தனிமையும் இன்னும் ஏராளமாக இருந்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது.

கதைக் களம் எப்படி பயணமாகும்...?

ஒரு கல்லூரி விடுதி என்பது, ஒரு சமூகம். ஒரு தேசம். அங்கிருக்கும் சூழலையும் சக மாணவர்களையும் அனுசரிக்க முடியாமல் போனதுதான் இங்கே பல பேருக்கான பிரச்னை. அது வெறும் வாடகை சத்திரம் அல்ல. அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். ரசவாதக் கூடம். மாறுபவனும் இருக்கிறான். மாற்றப்படுகிறவனும் இருக்கிறான். எல்லா விடுதிகளிலும் யாரோ ஒருவன் வீட்டுக்கு அடங்காமல் வந்து சேருகிறான். யாரோ ஒரு மாணவனுக்கு காதல் பூக்கிறது. ஒருவனுக்கு மரணம் நிகழ்கிறது. யாரோ ஒருவன் கலைஞனாகிறான். கவிதை எழுதுகிறான். அரசியல் கற்று உணர்கிறான். ஒருவன் குற்றவாளியாகிறான். நிறைய பேர் திருந்துகிறார்கள். யாரோ ஒருவன் தன்னைத்தானே கண்டுபிடித்துக் கொள்கிறான் வெகு நாள்களுக்கு பிறகு... கல்லூரி விடுதி என்பது ஒரு வனத்தை கடந்த மாதிரி இருக்கிறது எல்லோருக்கும். இதுதான் கதையின் அடிப்படை. இன்றைய கல்வி சூழல், அரசியல், எல்லாவற்றையும் கொண்டு வருவதில் சவால். ஒரு அளவுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். இங்கேயும் அப்படி இடம். கட்டுப்பாடுகள் நிறைந்த மாணவர்கள் விடுதி. ஆனால் அதை மீறிய காதல், பாட்டு, டான்ஸ், ரொமான்ஸ் என ஒரு வாழ்க்கை அங்கே உண்டு. அந்த கலகலப்பும், உற்சாகமும் பயணமாகும் போது, அந்த விடுதிக்குள் எதிர்பாரா விதமாக ஒரு பெண் சிக்கிக் கொள்கிறார். அவர் எப்படி வெளியே வந்தார். அதன் பின்னணி.... அந்த அழகின் உற்சாக தருணங்கள்தான் கதை.

அசோக் செல்வன் - பிரியா பவானி சங்கர் ஜோடி....

இதுதான் அசோக் செல்வன் என எந்த லேபிளையும் அவர் மீது ஒட்டி விட முடியாது. ஏராளமான பாகுபாடுகள் வந்தாலும், ஒரு கலைஞனாக அவர் அதை கையாளுகிற விதம் புத்தம் புதிது. மனசுக்கு பிடிக்காத எந்த காரியத்தையும் அவர் கடுமையாக எதிர்க்கிறார். அது ஒரு கலைஞனுக்கு முக்கியமான ஒன்று. அதே வேளையில் உதவி என்று வந்தால், அவரால் முடிந்தால் செய்து விட்டுத்தான் அடுத்த வேலைக்குப் போகிறார். எப்போதும் அணுகி பேசலாம். தரமான கதைகளை ஏற்றுக் கொள்வதில் தீர்மானமாக இருக்கிறார். மொத்தத்தில் இந்த நிமிஷம் நம்முடையது வாழ்ந்து விடலாமே என்று நினைக்கிறார். வாய்ப்பு கிடைத்தால், இன்னொரு படத்திலும் அவரை இயக்க காத்திருக்கிறேன். பிரியா தெளிவான பொண்ணு. கதையின் மீது இருந்த நம்பிக்கைக்காக நடிக்க தயாராகி வந்தார். நல்லதொரு இடம் பிரியா பவானி சங்கருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. இதே அர்ப்பணிப்பும், ஆர்வமும் இருந்தால், அந்த பொண்ணுக்கு ஒரு நிலையான இடம் இருக்கிறது. அருமையான ஒத்துழைப்பும் இந்த படம் நினைத்த மாதிரி வளர்ந்து வர, முக்கிய காரணம். யோகி பாபு, நாசர், அறந்தாங்கி நிஷா, "முண்டாசுப்பட்டி' ராமதாஸ், சதீஷ் இப்படி எல்லா காட்சிகளிலும் நம்பிக்கையான நடிகர்கள் வலம் வருகிறார்கள். அத்தனை பேரும் எல்லோருக்கும் தெரிந்தவர்கள்.

ட்ரைடெண்ட் ரவி தயாரிப்பில் ஒரு படம்... எந்தளவுக்கு சுதந்திரம்....

அவரை நான் ஒரு தயாரிப்பாளராக பார்க்கவில்லை. நல்ல கதையை, அடையாளம் காட்ட தெரிந்த சக படைப்பாளியாக பார்க்கிறேன். அவர் நினைத்திருந்தால், வேறு இயக்குநருக்கு இந்த வாய்ப்பை தந்திருக்கலாம். ஆனால், அதைத் தாண்டி என் கதையை அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கில் இதை தயாரிக்க வந்தார். எந்த இடத்திலும் இடறி விடாத அன்பு அவரிடத்தில் இருந்தது. அதுதான் இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு அம்சம். இந்தக் கதையை போலவே, ஆழமான எளிமையான அன்பு அது. அவருக்கு நன்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com