வெய்ஜியாஸ்கௌ என்ற சீன இளைஞர், பெய்ஜிங் விமான நிலையத்தில் 14 ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறார்.
"மூட்டைப் பூச்சிக்கு பயந்தவன் வீட்டை கொளுத்தினான்' என்பது பழமொழி. அதுபோல், வீட்டில் உள்ளவர்கள் செய்த தொந்தரவுகள் தாளாமல் வெய்ஜியாஸ்கௌ 2008-ஆம் ஆண்டில் விமான நிலையத்தில் அடைக்கலம் புகுந்தார். கூடவே ஓர் அடுப்பும் கொண்டு போனார். விமான நிலையத்திலேயே சமைத்து, உண்டு, உறங்கி 14 ஆண்டுகள் கழித்து இருக்கிறார்.
அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றதால், 1,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10 ஆயிரம்) மாதம்தோறும் சீன அரசு ஓய்வூதியமாய் அளித்துக்கொண்டிருந்தது. இந்தப் பணத்தில் அவர் வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார். இந்த விஷயம் அண்மையில்தான் தெரியவந்தது.
விசாரித்தால், ""மது குடிக்காதே. புகை பிடிக்காதே.. என்று வீட்டில் உள்ளவர்கள் தொந்தரவு செய்தார்கள்.
அதான் வீட்டைவிட்டு வெளியேறினேன்'' என்கிறார் வெய்ஜியாஸ் கௌ கூலாக!
நிழல் நிஜமானது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, டாம் ஹாக் நடித்த "டெர்மினஸ்' என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் ஓர் இளைஞர் விமான நிலையத்திலேயே சில ஆண்டுகள் கழித்த நிகழ்வை மையப்படுத்தி இருந்தது.
அத்திரைப்படக் கதை விவரம்:
இளைஞர் ஒருவர் வெளிநாட்டு விமானத்தில் அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அவரைப் பார்த்த விமான நிலைய அலுவலர்கள் சந்தேகப்படுகின்றனர். அவன் பேசிய மொழியும், அதிகாரிகள் பேசிய மொழியும் புரியவில்லை.
இளைஞரைத் தீவிரவாதி என்று அதிகாரிகள் நினைத்துவிடுகின்றனர். மீண்டும் அவனை வெளிநாட்டுக்கு அனுப்ப முடியவில்லை. உண்மையில், அந்த இளைஞர் இசைக்கலைஞர் ஒருவரது மகன். தனது தந்தையுடன் இசைத்த கலைஞர் ஒருவரைத் தேடி இளைஞர் நியூயார்க் வந்தார். வெளியில் போகவும் முடியவில்லை. அந்த விமான நிலையத்திலேயே பல நாள்கள் தங்கினார். உண்டார், உறங்கினார்.
இறுதியில் விமான நிலையத்தில் வேலை செய்த இந்தியர் ஒருவர் உதவி செய்ய, பிரச்னையைத் தீர்ந்து, தந்தையின் நண்பரைப் பார்த்துவிட்டு, சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார். இதுதான் அந்தத் திரைப்படத்தின் கதை!