துபையில் தற்போது "துபை எக்ஸ்போ' என்ற கண்காட்சி நடந்து வருகிறது. இதில் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இசை நிகழ்ச்சி முடிந்ததும் துபையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபிர்டாஸ் ஸ்டூடியோவுக்கு சென்றார் இளையராஜா. அவருக்கு தனது ஸ்டூடியோ முழுவதையும் சுற்றிக்காட்டிய ஏ.ஆர்.ரஹ்மான், அவருடன் புகைப்படம் ஒன்றையும் எடுத்து அதனை தனது சுட்டுரையில் வெளியிட்டார். அதனுடன் "மேஸ்ட்ரோ இளையராஜாவை ஃபிர்டாஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. எதிர்காலத்தில் எங்கள் ஸ்டூடியோவில் அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்' என குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து இளையராஜா ரஹ்மானின் கோரிக்கையை ஏற்பதாகவும், விரைவில் அவர் ஸ்டூடியோவில் பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.