திறமையுள்ள புதுமுகங்களின் புகலிடமாக திகழ்ந்து, பல விருட்சங்களின் விதையாக அமைந்து, 18 இயக்குநர்கள், 7 இசை அமைப்பாளர்கள், 10 ஒளிப்பதிவாளர்கள், 3 படத்தொகுப்பாளர்கள் மற்றும் பல்வேறு நடிகர்களுக்கு இதுவரை அறிமுக அடையாளம் கொடுத்துள்ள தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சி வி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் வெற்றிகரமாக தனது பத்தாம் ஆண்டுக்குள் நுழைந்துள்ளது. பத்தாவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக "காலங்களில் அவள் வசந்தம்' என்ற படத்தை தயாரித்து வருகிறது.
இயக்குநர் பிரியாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராகவ் மிர்தாத் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். கவுசிக், அஞ்சலி நாயர், ஹெரோஷினி, வர்கீஸ் மேத்யூ, ஆர் ஜே விக்னேஷ், அனிதா சம்பத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் பேசும் போது... ""காதல் என்றால் வெறும் ஆண், பெண் கவர்ச்சியா இல்லை அதையும் தாண்டிய உணர்வா...? என்னும் கேள்விக்கு விடை தேடும் ஜனரஞ்சகமான ரொமாண்டிக் படம் இது. திருமணத்திற்குப் பிறகான காதல் எப்படி ஒரு பட்டாம்பூச்சியாய், மழை, வசந்தம், கோடை மற்றும் இலையுதிர் காலம் என்ற நான்கு காலங்களில் பரிணாம வளர்ச்சி அடைகிறது என்பதே படத்தின் மையக்கரு. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஜூலை மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது'' என்றார் இயக்குநர்.