இளைஞர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியமான மனமும், உடல்நலனும் அவசியமாகும். இல்லையெனில் பல்வேறு பிரச்னைகளையும், இன்னல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதிகபட்சமாக, வாழ்க்கையையே தொலைக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுவோம். ஆரோக்கியமான உடல், மனநிலையுடன் இருப்பதற்கு நமது வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்து கொள்ள வேண்டும். இதோ சில எளிய ஆலோசனைகள்:
உடலுக்கு: சிப்ஸ் மற்றும் குக்கீஸ்களைச் சாப்பிடாதீர்கள். தானியங்கள், பயிறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றாக கனிந்த பழங்களை அன்றாடம் சாப்பிட வேண்டும். திராட்சை, ஆப்பிள், பேரீக்காய், ஆரஞ்சு பல்வேறு நிறங்களுடைய பழங்களைச் சாப்பிடுவது நல்லது.
பசித்துப் புசித்தல் நல்லது. சரியான நேரத்தில் சரியான உணவைச் சாப்பிட வேண்டும். நமது உணவில் பாதி காய்கறிகள், சத்து நிறைந்த தானியங்கள் இருந்தால் நல்லது.
சத்தான உணவு முக்கியம். மாமிச உணவுகளை முடிந்த வரை தவிர்ப்பது நலம்.
நன்றாக ருசித்து, சுவைத்து, மென்று சாப்பிட வேண்டும். சாப்பிட்ட உணவுகள் நன்றாக ஜீரணமாக இது அவசியம்.
தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, சோடா பானங்களை தவிர்த்துவிட்டு, டீ, பழச்சாறுகளை குடிக்க வேண்டும்.
சர்க்கரையை அதிக அளவில் சேர்ப்பதையும், எண்ணெய்யில் பொரித்த, வறுத்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
நமது ஒவ்வொரு செயலிலும் உடலுக்குப் பயிற்சி இருக்க வேண்டும். முடிந்த வரை லிஃப்ட்டைப் பயன்படுத்தாதீர்கள். படிக்கட்டுகளில் ஏறிச் செல்லுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்லிடப் பேசி மூலம் உரையாடுவதைத் தவிர்த்து, அவர் இருக்கும் இடத்துக்கு சென்று நேரில் பேசுங்கள்.
மனதுக்கு: ஆழ்ந்து சுவாசிக்க து பயிற்சி எடுக்க வேண்டும். அப்படி செய்யும்போது, நமது உடலில் மிகப்பெரிய அமைதி ஏற்படும் ஆச்சரியத்தை நாமே உணர்வோம். இந்தப் பயிற்சியை வீட்டிலோ, அலுவலகத்திலோ எங்கு வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.
உங்களுக்காக குறைந்தது 30 நிமிடங்களை ஒதுக்குங்கள். அந்நேரத்தில் மிகவும் அமைதியாக இருங்கள். செல்லிடப் பேசிகளுக்கு ஓய்வு கொடுங்கள். இசையை கேளுங்கள். மனதை ஈர்க்கும் விஷயங்களைப் படியுங்கள். மன இறுக்கம் தலைதெறிக்க ஓடிவிடும்.
நகைச்சுவை உணர்வை வளர்த்து கொள்ளுங்கள். பிடித்த பாடலை மனதுக்குள் பாடுங்கள். மகிழ்ச்சியாக, புன்முறுவலுடன் உலா வாருங்கள்.
நன்றியுணர்வை வளர்த்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் நமது முதல் சிந்தனையாகவும், படுக்கைக்கு செல்வதற்கு முந்தைய சிந்தனையாகவும், நமது வாழ்க்கையில் நன்றியுணர்வுடன் நடந்து கொண்ட 3 சம்பவங்களை ஒவ்வொரு நாளும் நினைத்துப் பாருங்கள்.
சக மனிதர்கள் யாரையும் வெறுக்காதீர்கள். பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பது நல்லது.