தன்னைப் பற்றிய தெளிவான உள் உணர்வு (SELF - CONCEPT) உள்ள ஒரு பிள்ளை, வாழ்வில் தன்னால் முடிந்த அளவு உயர்வை நோக்கிச் செல்லும். தன் இலக்கில் இம்மியளவும் விலகாது. மற்றவர்களுடைய பாராட்டைப் பெறவோ அல்லது மற்றவர்களது கவனத்தைத் தன்மீது திருப்பவோ முயலாது. பிறரைக் குற்றம் சொல்லாது (NO BLAME GAME). தன் இயலாமையை மறைக்காமல் தன்னை மீளாய்வு செய்து வளரும். இப்படியானவர்கள் தோல்வியைப் புதிய அனுபவமாக எடுத்து அதிலிருந்து புதிய அத்தியாயத்தைக் கற்று, திடகாத்திரமானவர்களாக மாறுவார்கள். மனதில் மகிழ்ச்சி, திருப்தி, தன் வெற்றியால் வளர்ச்சியால் இறுமாப்படையாது, பெரும் தோல்வி ஏற்படும்போதும் அதை எதிர்கொள்ளும். சோர்வடையாது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் அறவே தலைதூக்காது. தன் நம்பிக்கையையும் தன்னைப் பற்றிய சுயமதிப்பும் (SELF RESPECT) இம்மியளவும் குறையாது.
வெளி அபிப்ராயங்களினால் அடிபட்டுச் செல்லமாட்டார்கள். தங்களை எந்தச் சூழலிலும் சுலபமாக ஈடு செய்வார்கள். மற்றவர்களது வெற்றிகளையும், உயர்வையும் மதிப்புடன் ஏற்றுக் கொள்வார்கள்.
இப்பிள்ளைகள் குடும்ப வாழ்வில் தங்களைத் தாங்களே நிர்வகிப்பார்கள். ஒத்துப் போவார்கள். தன்னம்பிக்கையுடையவர்கள். உறுதியான திருமணம், ஆரோக்கியமான உடல் நிலையும், உள்ளமும், ஆனந்த வாழ்வும் உண்டு. இதுதான் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய சன்மானம்.
எஸ்.குருபாதம் எழுதிய "குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளர விடுங்கள்' என்ற நூலிலிருந்து...