இறப்பு என்பது யாது? மரணத்தின் பின் மனிதனுடைய நிலை என்ன? என்ற கேள்விக்கு கன்பூசியஸ், ""வாழ்க்கையைப் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் மரணத்தைப் பற்றி எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?'' எனத் திருப்பிக் கேட்டது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.
"இளைஞர்கள் வீடுகளில் நல்ல பண்புடையவர்களாக வளர்க்கப் பெறல் வேண்டும். அவர்கள் நடத்தையில் கருத்துடையவர்களாகவும் நாட்டு மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் மக்களிடத்து அன்புடையவர்களாகவும் பழக வேண்டும்''
உலகியலை விட்டு ஒதுங்கி துறவு மேற்கொள்வதை கன்பூசியஸ் விரும்பவில்லை.
"பறவைகளோடும் மிருகங்களோடும் நம்மால் உறவு கொள்ள முடியுமா? நம்முடன் பிறந்து நம்முடன் வாழும் மக்களுடன் சேர்ந்தும் கூடியும் வாழ இயலவில்லை என்றால் வேறு யாரோடுதான் நம்மால் வாழ முடியும்?'' எனக் கேட்பாராம்.
"மனித சமுதாயத்தைச் சரியான அடித்தளத்தைக் கொண்டு, ஒழுங்காக அமைக்க வேண்டும். மனிதன் மனிதனாக வாழ வேண்டும். மனச்சான்றுடையவனாகவும், மனிதப் பண்புகள் அனைத்தும் நிறைந்து நல்லவனாகவும், வல்லவனாகவும் வாழ வேண்டும்'' என்பதை லட்சியமாகக் கொண்டார்.
அன்பு நெறியே அவர் அமைக்க விரும்பிய வாழ்க்கைத்தளம். அறநெறியே அதன் உயிர்நாடி. தூய்மையான மனித வாழ்க்கையே அவர் காண விரும்பிய கடவுள். பண்பாடும் ஒழுக்கமுமே அக்கடவுள் விரும்பிய அர்ச்சனை.
டி.ரமேஷ் எழுதிய "நான் பார்த்து வியந்த சீனா' என்ற நூலிலிருந்து...