"ரெளத்திரம் பழகு' என்று பாரதி சொல்வது கோபப்படக் கற்றுக் கொள்வதற்குத்தான்.
பெற்றோர்கள் குழந்தைகளின் தவறான பழக்கங்கள் மீது கோபப்பட வேண்டும். மாணவர்கள் சோம்பல் மீது கோபப்படலாம். அறிவியலறிஞர் அறியாமை மீது கோபப்படலாம். நடிக்கத் தெரியாத நடிகர்கள் இயக்குநர்கள் மீது கோபப்படலாம். நம்மைச் செதுக்கிக் கொள்வதற்காக நம் மேலேயே நாம் தாராளமாகக் கோபப்படலாம்.
பரீட்சை மீதிருக்கின்ற கோபத்தை மதிப்பெண்களாக வெளிப்படுத்த வேண்டும். திருடர்கள் மீதிருக்கின்ற கோபம் நாய் வளர்ப்பதில், பைரவர் மீது வைக்கின்ற பாசத்தில் வெளிப்படுத்தப்படுவது போல் இருக்க வேண்டும். நோய் மீதும் "ஆஸ்பிடல் வாசத்திலும்' இருக்கின்ற கோபம், பல்லைக் கடித்துக் கொண்டு உடற்பயிற்சி செய்வதிலும், அதிகாலைச் சூரியனோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடுவதிலும் காட்டப்பட வேண்டும்.
நம்மை யாரும் கோபப்பட்டுத் திட்டிவிட்டாலோ அல்லது கடிந்து கொண்டாலோ அதற்கான சூழ்நிலைக்கு நம்மைக் கொணர்ந்த நிகழ்வை மாற்றிக் காட்ட கோப ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். தேர்வுக்குத் தயாராகையில் நம்முடையை போட்டி கண்களுக்குத் தெரியாத ஏராளமான பேரோடன்றி, நமது உடன் படிப்பவர்கள் அல்ல. எனவே ஒருவருக்கொருவர் உதவி செய்தே வாழ வேண்டும்.
இரா.ஆனந்தகுமார் எழுதிய "பொய்க்கடிகாரம்' நூலிலிருந்து...