ரோபோக்கள் உருவாக்கம் பெற்று சுமார் 100 ஆண்டுகள் நெருங்கிவிட்டன. முதலில் மனிதர்களின் செயல்களைச் செய்யும் வகையில் பொம்மைகளைப் போல் உருவாக்கப்பட்ட ரோபோக்கள் பிற்காலத்தில் மனிதர்களுக்கு உதவும் கருவிகளாக மாற்றம் பெற்றன.
பின்னர் அவை தொழிற்சாலைகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.
தற்போது அவற்றுக்கு செயற்கை நுண்ணறிவு எனப்படும் "ஏஐ'-யை பொருத்தி மனிதர்களுக்கு இணையான அசைவுகளைச் செய்யும் ரோபோக்களாக மாற்றம் கண்டுள்ளன. எனினும், பேரழிவு போன்ற அவசரக் காலங்களில் பயன்படும் வகையில் ரோபோக்களை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு ரோபோவை அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர். இது உலகின் முதல் நான்கு கால் ரோபோவாகும். பார்ப்பதற்கு சிறுத்தையைப் போல் இருக்கும் இந்த ரோபோவுக்கு "சீட்டா' எனப் பெயரிட்டுள்ளனர். வெறும் 9 கிலோ எடை கொண்ட இந்த சுட்டி ரோபோ பின் நோக்கி காற்றில் குட்டிக்கரணம் அடிப்பதுதான் இதன் தனிச் சிறப்பு.
இதற்கு முன்பு இரண்டு கால்களைக் கொண்ட மனித ரோபோ இதுபோன்ற பின் நோக்கி குட்டிக்கரணம் அடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அது எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இந்நிலையில்தான், பின்நோக்கி குட்டிக்கரணம் அடித்து நிலையாக நிற்கும் இந்த நான்கு கால் ரோபோவை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இந்த ரோபோவை எட்டி உதைத்தாலும், அதன் உடல் பகுதி அதற்கு ஏற்ப வளைந்துக் கொடுத்து மீண்டும் இயங்கத் தொடங்குகிறது. இதன் நான்கு கால்களும் சமமற்ற சாலைகளுக்கு ஏற்ப பயணம் செய்வதிலும், படிகளில் ஏறுவதிலும், பாய்வதிலும் வல்லமை படைத்தவை. உயரத்தில் இருந்து தூக்கி கீழே போட்டாலும், சிறுத்தையைப் போன்று பதுங்கி கீழே இறங்குகிறது. மனிதர்களை விட இரண்டு மடங்கு வேகத்தில் நடக்கும் திறன் படைத்தது. இதற்காக ரோபோவின் நான்கு கால்களில் 12 மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வகையிலான ரோபோக்களை எளிதில் பழுதுபார்த்துவிடலாம் என்று எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய அசைவுகளைக் கொண்ட இந்த "சீட்டா' ரோபோக்களை உருவாக்கி, பிற ஆராய்ச்சியாளர்களிடம் அளித்து மேலும் பல அசைவுகளை அளிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.