முக நூலிலிருந்து....
கவிதையில் ஆழம் வேண்டும் என்கிறீர்... அதென்ன கிணறா?
குபீரெனப் பாய்ந்து கடப்பாரை நீச்சலடிக்கப் போகிறீரா?
ரத்திகா பவழமல்லி
இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து...
இன்று வரை...
மரணமடையாதது
மரணம் மட்டும் தான்...
அது ஒரு நாளும் மரணமடையப் போவதில்லை.
சுதே கண்ணன்
எந்தக் கஷ்டமும் இல்லாம வாழுறதுல என்ன சார் கெத்து?
எல்லா கஷ்டத்தையும் சமாளிச்சு மேல வர்றது தான் சார்... கெத்து!
மணிமேகலை சித்தார்த்தர்
தினம் ஒரு சொல்லாவது...
குத்தீட்டியாகிறது.
தினம் ஒரு சொல்லாவது...
மயிலிறகாகிறது.
நேசமிகு ராஜகுமாரன்
சுட்டுரையிலிருந்து...
சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மேல் படும் என ஒதுங்கிச் செல்வதை...
சாக்கடை தனக்கான பெருமையாய் நினைத்துக் கொள்கிறது.
கோதை
நடப்பது எல்லாம் நன்மைக்கே...
ஆதலால்... நடந்து செல்லுங்கள்.
சுகர் குறையும்.
சுபாஷினி BAS
நிகழும் யாவற்றிலிருந்தும், ஏதாவதை புதிதாய் ஏற்கிறேன்...
அல்லது பழகிச் சுகித்திருக்கும் ஒன்றை விலக்குகிறேன்...
நிகழ்பனவற்றைப் பின்பற்றுதலல்லவோ வாழ்வு!
ஜீவன்
கைவசம் இருப்பது ஒரே ஒரு பட்டுச்சட்டை.
அழுக்குப் பிடிக்கும் முன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது பட்டாம்பூச்சி!
இளந்தென்றல்
வலைதளத்திலிருந்து...
திருவள்ளுவருக்கும் வாசுகி அம்மாவுக்கும் குழந்தை இருந்ததா? அவரும் என்னை மாதிரி இரவு எட்டு மணிக்கு செர்லாக் ஊட்டி, பாட்டுப் பாடி தூங்க வைத்து, பின் இரவு பதினொரு மணிக்கு ஹக்கீஸ் டயப்பர் மாற்றி இருப்பாரான்னு எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா மனுஷன் ஒன்னேமுக்கால் அடிகளில் மழலைச் சொற்கள் பத்தி சோக்கா சொல்லி இருக்காருய்யா!
அதுவும் குழந்தைகள் ஒரு அர்த்தமும் இல்லாமல் தன் போக்குக்கு ஒலிகளை எழுப்பும்போது அதை நம் போக்குக்கு, "அடடா, என் குழந்தை என்னமா பேசறான்!'' எனப் பூரிக்கும் தருணங்கள் இருக்கே! அங்க தான்யா நிக்கிறாரு வள்ளுவர்.
பொதுவாக ஏழு மாதத்திலிருந்து குழந்தைகளுக்குப் பேச்சு வருமாமே! நாம என்னத்த கண்டோம்?
முதலில் "தா... தா... தா' என ஒலிக்கத் தொடங்கி நாம அதை தாத்தா என பொருட்கொண்டு பெருமிதப்படுகிறோம். தாத்தாவைத் தொடர்ந்து அத்தை வலம் வரத் தொடங்குவார். அம்மா அப்பா எல்லாம் வர சிறிது காலம் பிடிக்கும் போல.
... இந்த நேரத்தில் டக்குனு தோணிய ஹைக்கூ (அத நாங்க சொல்லணும்)
வெப்காம் பார்த்து அழுகை நிறுத்தும் குழந்தை.
சிரித்தபடியே அழும் ஆன்சைட் அப்பா.
இதை ஹைக்கூன்னு ஒழுங்கா ஒத்துக்குங்க. இல்லாட்டி நீங்க ஒத்துக்கற வரைக்கும் ஹைக்கூ எழுதறதா உத்தேசம்.
http://ammanchi.blogspot.com/