இணைய வெளியினிலே...(25/02/2020)

பொதுவாகவே சிங்கப்பூர் வாழ்மக்கள் வரிசையில் நிற்பதில் பாதி வாழ்க்கை போய்விடும் என்று சொல்வார்கள்.
இணைய வெளியினிலே...(25/02/2020)

முக நூலிலிருந்து....
• அந்தப் புல்வெளியில்
பனித்துளிகளை மேயுமாம் வெயில்!
வதிலை பிரபா

• துன்பங்களே
ஆசைகளுக்குக் காரணம்.
சுதீர் செந்தில்

• முகத்தில் குத்தினால்
முகத்தில் காயம் படும்.
கையில் குத்தினால்
கையில் காயம் படும். 
முதுகில் குத்தினால் மட்டும்
மனதில் காயம் படுதே.... 
ஏன்?
பெ. கருணாகரன்

• "யாரையும் 
காதலிக்கவுமில்லை...
யாரும் என்னைக்
காதலும் செய்யவில்லை''
என்ற நண்பன்
கடைசியாய் சொன்னான்:
"100% மனநலனுடன் 
இருப்பது
அவ்வளவு நன்றாகவும் இல்லை''
அன்பில்பிரியன் 

சுட்டுரையிலிருந்து...
• எத்தனை அவசரமாக 
வந்தாலும்
நம்மை உட்கார வைத்து
அழகு பார்ப்பவர்தான்...
ரிசப்சனிஸ்ட்.
சப்பாணி

• ஒரே மாதிரி 
உலகத்துல ஏழு பேர் 
இருப்பாங்களாம்...
நம்ம நிலமையே 
மோசமாயிருக்கு...
மிச்ச ஆறு பேரு... 
எந்த நாட்ல... எந்த தெருவுல...
பிச்சை எடுத்துட்டு 
இருக்காங்களோ?
வண்டு முருகன் 

• எதை நீங்கள் புரிந்து கொள்ள 
விரும்புகிறீர்களோ, 
அதை மட்டுமே நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்-
எல்லாவற்றையும் அல்ல...
பூரணமாக அல்ல.
யாத்திரி 

• தரையிறங்கும்
மழைத்துளிகளிலிருந்து
சட்டென்றெழுந்து 
விரிகின்றன...
நமக்கான குழந்தைமைகள்.
சுகந்தீ

வலைதளத்திலிருந்து...
பொதுவாகவே சிங்கப்பூர் வாழ்மக்கள் வரிசையில் நிற்பதில் பாதி வாழ்க்கை போய்விடும் என்று சொல்வார்கள். உண்மைதான், இங்கு வரிசையில் நிற்பதில் ஒழுங்கு கடைபிடிக்கப்படும். சின்ன நாடாக இருந்தாலும், மக்கள் நெருக்கம் உள்ள நாடு. வரிசை முறை இல்லை என்றால் எங்கும் சச்சரவுகள் ஏற்பட்டுவிடும். மற்றவர்கள் நேரத்தில் நாம் கைவைக்கக் கூடாது என்பதால், எங்கெல்லாம் வரிசையில் நிற்க வேண்டுமோ, அங்கெல்லாம் வரிசை உருவாகும்.
புது ஐபேசி (ஐபோன்) வெளியிட்டால் முதல் நாள் இரவே போய் நிற்க தொடங்கிவிடுவார்கள்.
24 மணி நேரம் கூட வரிசையில் நிற்பதை நேர விரயம் என்று நினைக்க மாட்டார்கள். தமக்கு ஒரு பொருள் வேண்டி இருக்கிறதென்றால், அதற்காக வரிசையில் நிற்பதைத் தவிர வேறு வழியில்லை என்றால், நிற்பார்கள். புதுவீடுகள் விற்பனைக்கு விடும் போது வரிசையில் நிற்பதற்கே கல்லூரி மாணவர்கள் அதை பகுதி நேர வேலையாக எடுத்துக் கொண்டு, வரிசையில் நிற்பதற்காக பணம் பெற்றுக் கொண்டு (டோக்கன்) வாங்குபவர்கள் சார்பில் நிற்பார்கள். 24 மணி நேரம் வரிசையில் நிற்க இவ்வளவு கூலி என்று மணிக் கணக்குகளை வைத்து வரிசையில் நிற்பதும் இங்கு தொழிலாகத்தான் நடக்கிறது. 
வரிசை முறைகளை சீர்குலைக்கக் கூடாது என்பதற்காக மாற்று ஏற்பாடுகளாக கூலிக்கு ஆள் அமர்த்தி வரிசையில் நிறுத்திக் கொள்வது இங்கு தவறாகப் பார்க்கப்படுவது இல்லை. ஒருவர் வரிசையில் நிற்பதால் இழக்கும் பணம், அவர் சார்பில் நிற்பவருக்கு சொற்பக் கூலி தான். பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் / தமிழகத்தில் இருந்து இதைப் படிப்பவர்களுக்கு வரிசை முறைக்கு ஏன் சிங்கப்பூரில் இவ்வளவு முதன்மைத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை மேலே புரிய வைத்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். முறைப்படி வருபவர்களுக்கு முன் உரிமை இங்கு அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் ஒன்று தான். இங்கு யாரும் குறுக்கே சென்றோ, மற்றவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் குறுக்கு வழியில் நுழையவோ முயற்சிக்க மாட்டார்கள். 
http://govikannan.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com