உலகில் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்குச் சான்றாக புகைப்படங்கள் திகழ்கின்றன. இந்தப் புகைப்பட தொழில்நுட்பத்தை மையமாக வைத்தே உலகில் பல்வேறு துறைகளில் வணிகம் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் போன்கள் வந்த பிறகு ஒருவர் ஒரே மாதத்தில் ஆயிரம் புகைப்படங்களை எடுத்துவிடுகிறார். ஆகையால், புகைப்படங்களைச் சேமிக்கும் புதிய தளமாக "கூகுள் போட்டோஸ்'-ஐ அந்த நிறுவனம் 2015-இல் அறிமுகம் செய்தது. ஸ்மார்ட் போன்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள், விடியோக்களை சேமிக்கும் தளமாக அது விளங்கியது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு கூகுள் போட்டோஸ் புதுப்பொலிவு பெற்றுள்ளது. நமது சேமிப்பில் உள்ள பல ஆண்டுகள் புகைப்படங்கள் உலகில் எந்த இடத்தில் எப்போது எடுக்கப்பட்டன என்பதை அடிப்படையாக வைத்து கூகுள் மேப்பில் தேடல் செய்யலாம். கூகுள் மேப்பில் இடத்தை கிளிக் செய்தவுடன் அந்த இடத்தில் எடுத்த புகைப்படம் நொடிப்பொழுதில் வந்துநிற்கும்.
அதுமட்டுமின்றி நம்மிடம் உள்ள பல ஆயிரம் புகைப்படங்களை, ஒருவரின் புகைப்பட அடையாளத்தை வைத்தே அவரது அனைத்து புகைப்படங்களையும் தேடிவிடலாம்.
செயற்கை நுண்ணறிவு (அஐ) மூலம் புதுப்பொலிவு பெற்றுள்ள இந்த புதிய சேவையில் புகைப்படங்களை விடியோ வடிவில் மெல்லிய இசையுடன் இணைக்கும் வசதியும் உள்ளது. இந்த இசையை உடனடியாக நிறுத்தும் பொத்தானும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து நாம் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்யும் புகைப்படங்கள், கூகுள் போட்டோஸில் தானாகச் சேமிப்புக்காக பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன. இந்தச் சேவையை கூகுள் நிறுவனம் நிறுத்தியுள்ளது. கரோனா தீ நுண்மி காலத்தில் ஏராளமான புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எதுஎப்படியிருந்தாலும், புகைப்படத் தேடலில் புதிய யுக்தியை புகுத்திய கூகுளின் நடவடிக்கை வரவேற்கத்தக்கதே.