உலகமே இண்டெர்நெட் வலையில் சிக்கி உள்ளது. இதில் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் உலக நடப்புகளை மக்கள் தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் அவற்றின் உண்மைத் தன்மை என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண கூகுள் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அது தோல்வியில் முடிவடைந்தது. இதன் காரணமாக அண்மையில் அமெரிக்காவில் ஏற்பட்ட இனக் கலவரத்தின்போதும் போலி புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்வால் பல இடங்களில் கலவரம் பரவியது. இதைத் தடுப்பது என்பது கூகுள், யூடியுப் போன்ற நிறுவனங்களுக்கு பெரும் சவாலான காரியமானது.
இந்நிலையில், போலி புகைப்படங்களை அடையாளம் கண்டு முத்திரை குத்தும் புதிய சேவையை கூகுள் தொடங்கி உள்ளது. கூகுள் புகைப்பட தேடலின்போதே சர்ச்சைக்குள்ளான புகைப்படத்தின் கீழ் உண்மைநிலை குறித்த குறிப்பு இடம்பெறும். அதை கிளிக் செய்துவிட்டு உண்மை விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
தனியார் நிறுவனம் மூலம் இந்த உண்மைத் தன்மை அறியும் சேவையை கூகுள் நிறுவனம் செய்து வருகிறது. உதாரணமாக, ஷார்க் மீன்கள் தொடர்பாக கூகுள் புகைப்படம் தேடலின்போது "ஹவுஸ்டன் சாலைகளில் ஷார்க்குள் வலம் வருகின்றன' என்ற போலி புகைப்படம் வந்தால் அதன் கீழ் உண்மை நிலை குறிப்பு இடம் பெற்றிருக்கும்.
ஆனால் அனைத்து வகையிலான புகைப்படங்களும் உண்மைத்தன்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தப்படுமா என்பதையும், எதன் அடிப்படையில் இந்த சோதனைக்கு புகைப்படங்கள் உட்படுத்தப்படும் என்பதையும் கூகுள் நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை.
தற்போது சில நாடுகளில் மட்டும் அமலுக்கு வந்துள்ள இந்த சேவை, அடுத்த சில வாரங்களில் உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல் சேகரிப்புக்கு பஞ்சமில்லாத இன்றைய காலகட்டத்தில், அதன் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்வதற்கு வழியில்லை. இதற்கான பாதையை கூகுள் வகுத்துள்ளது வரவேற்கத்தக்கது.