புதிய தொழில்நுட்பங்களால் மனித வாழ்க்கை முறைகளை எளிதாக்கிக் கொள்வதோடு வசதியையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அறிவியல் கண்டுபிடிப்பின் சிறந்த அம்சங்களை மட்டுமே பயன்படுத்திடும் மனப்பாங்கை எல்லாரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடிதம் மூலம் தொடர்பு கொண்டபோது பந்தபாசம் நிறைந்திருந்தது. எண்ணத்தினை வார்த்தைகளின் வழியே எழுதி படிப்போர் மனதைப் பரவசப்படுத்தியது. கடிதப் போக்குவரத்து மாறி கையடக்க கைபேசி அனைவரின் இயல்பு வாழ்க்கையையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. கைபேசியில் பேசிக் கொண்டே காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
தொலைத்தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டிய கைபேசியில் வேண்டாத ஆபத்தை விளைவிக்கும் அம்சங்களைப் பயன்படுத்தி வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பள்ளியில் பயிலும் இளம்பருவத்தினர் பெருமளவில் கைபேசியைப் பயன்படுத்துவதால், படிப்பதிலிருந்து கவனம் சிதறடிக்கப்படுவதுடன் சமூக சீரழிவிற்கும் வழி ஏற்பட்டு விடுகிறது. பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டியதை விடுத்து, தங்களின் கெüரவத்திற்காக வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதனால், ஆடம்பர வாழ்க்கையில் நாட்டம் கொள்ள வேண்டிய நிலைக்கு சிறார்கள் தள்ளப்படுகிறார்கள்.
தொலைக்காட்சிகள் இன்று தொல்லைக் காட்சிகளாக மக்களை வதைத்துக் கொண்டிருக்கின்றன. வர்த்தக நோக்கம் ஒன்றே இவர்களின் தலையாயச் சிந்தனையாக இருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. அறிவியல் கண்டுபிடிப்பின் அற்புத சாதனமான தொலைக்காட்சியில் சமுதாய மேம்பாட்டிற்கு உதவும் வண்ணம் நல்ல பல கருத்துகளை வழங்காமல், உறவைச் சீரழிக்கும் நடைமுறைக்கு ஒவ்வாத, கற்பனைக் கதாபாத்திரங்களால் பார்ப்போர் மனதைச் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும், ஆனந்தமாகவும் சமூகப் பங்களிப்புடனும் வாழ்ந்திடும் நிலையை இளைஞர்களுக்கு உருவாக்கித் தருவது அறிஞர்களின் தலையாயக் கடமையாகும்.
ப.நரசிம்மன் எழுதிய " நாடும் நாமும்' என்ற நூலிலிருந்து...