17-ஆம் நூற்றாண்டில் பறக்கும் இயந்திரத்தை வடிவமைக்கும் பணி தொடங்கிவிட்டாலும், இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்துதான் 1903-இல் ரைட் சகோதரர்களால் விமானம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.
விமானம் கண்டுபிடித்து சுமார் 117 ஆண்டுகளைக் கடந்த பின்பும், அதன் வடிவமைப்பு பெரிய அளவுக்கு மாறவில்லை. எனினும், விமானத்தின் நடுப்பகுதியில் பயணிகள் அமர்ந்து செல்வதுதான் தற்போதுள்ள அனைத்து வகையிலான நவீன விமானங்களின் பொதுவான வடிவமைப்பாக உள்ளது. இதை நெதர்லாந்தைச் சேர்ந்த டெல்ஃப்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மாற்றியமைத்துள்ளனர்.
பொதுவாக விமானத்தின் இரு இறக்கைகளின் கீழ் காற்று உறிஞ்சும் ராட்சத விசிறிகள் இருக்கும். இதை விமானத்தின் நடுவே கொண்டு வந்து இரு இறக்கைகளைப் பெரிதாக்கி புதிய வடிவிலான விமானத்தை உருவாக்கியுள்ளனர்.
பயணிகளின் இருக்கைகள், சரக்குகள், எரிபொருள் ஆகியவை புதிய விமானத்தின் இரு இறக்கைகளில் இருக்கும்.
தற்போதுள்ள விமானங்களில் உள்ளதைப் போன்ற அளவிலான பயணிகளின் இருக்கைகள் இந்த விமானத்தில் உள்ளன. ஆனால், வழக்கமான விமானங்களை விட இந்த புதிய விமானத்தில் 20 சதவீதம் எரிபொருள் மிச்சமாகும். இதனால் நீண்ட தூரத்துக்கு விமானத்தைத் தொடர்ந்து இயக்கலாம் என்பதால் இந்த வடிவத்தை விமான நிறுவனங்கள் குறிவைத்து ஆராய்ச்சிகளை வேகப்படுத்தியுள்ளன. மேலும், திரவ வடிவிலான ஹைட்ரஜன் அல்லது பேட்டரி மின்சாரத்தை வைத்து ராட்சத விசிறிகளை இயக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
ஏரோ டைனாமிக் வடிவில் இருக்கும் இந்த விமானத்தின் மாதிரியை 22.5 கிலோ எடையில் டச்சு விமான நிறுவனமான கேஎல்எம் உருவாக்கியுள்ளது. இதன் சோதனை ஓட்டமும் ஜெர்மனியில் உள்ள விமானதளத்தில் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது. எனினும், நிஜ விமானம் பயணிகள் போக்குவரத்துக்கு வர 2040 வரை ஆகலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்.
நவீன தொழில்நுட்பம், அறிவியலின் மாற்றத்தால் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத விமானங்கள் பயணிகள் சேவையில் ஈடுபடும் காலம் வெகு தொலைவில் இல்லை.