ஆசிரியர் மாணவர் என்று பிரித்துச் சொன்னாலும்இருவரும் ஒன்றுதான்.
இன்றைய மாணவர் நாளைய ஆசிரியர். இன்றைய
ஆசிரியர் நேற்று மாணவராக இருந்தவர்.
இன்னொரு கோணத்தில் ஆசிரியர் தருபவர். மாணவர்
பெறுபவர். சில நேரங்களில் மாணவர் தந்து ஆசிரியர் பெறுவதும் உண்டு.
பெறுவதற்கும் தருவதற்கும் தயங்காமல் இருப்பதே ஆசிரியர் - மாணவர் இயல்பு குணம்.
இந்த அருமையான செய்தியை இராமாநுஜரின் வாழ்க்கையிலிருந்து நாம் பெற முடியும்.
ஆசிரியர்கள் என்பவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
ஆசிரியர் என்பவர் வேராக இருந்து, மாணவர்கள் மலராய் மலர உறுதுணையாய் இருக்க வேண்டும்.
அறிவை உருவாக்கி, ஊட்டி அதனோடு அன்பை இணைத்து சமூக முன்னேற்றத்திற்குப் பாதை போடவேண்டும்.
ஆசிரியர்களுக்கு நம்பிக்கை என்பது தேவை.
மாணவர்களின் படைக்கும் திறனையும் சிந்திக்கும் ஆற்றலையும் தூண்டி அவர்களை மேம்படுத்த வேண்டும்.
ஆசிரியன் என்பவன் உலகிற்குச் சொந்தமானவன்.
மாணவர்களிடம் கேள்வி கேட்கும் திறனை ஊக்குவிக்க வேண்டும்.
ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்கும் ஒரு சூழலை
உருவாக்க வேண்டும். நம் உபநிஷத்துக்கள் கேள்வியால் உருவானவைதான்.
இராமாநுஜர் தம் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்டார்.
தம் மாணவர்களைக் கேள்வி கேட்க அனுமதித்தார்.
-----------
ஆசிரியர் சொல்லும் பாடத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்தை விவாதித்து மறுக்கலாம். ஆனால் அதற்காக மாணவர் ஆசிரியரை வெறுப்பதோ ஆசிரியர் மாணவரை வெறுப்பதோ கூடாது.
மாணவர் பொறுமையாக தன் கருத்தை நிறுவவே முயற்சிக்க வேண்டும். ஆசிரியருக்கு மாறுபட்ட கொள்கையை கருத்தை நிறுவினாலும் ஆசிரியரிடம் கொண்ட மரியாதை குறையக் கூடாது.
எஸ்.கோகுலாச்சாரி எழுதிய "உலகை உய்விக்க வந்த இராமாநுசர்' என்ற நூலிலிருந்து...