பிரேசிலை சேர்ந்த 7 வயதுச் சிறுமி நிக்கோலே ஒலிவெரா, உலகின் இளம் வானியலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் 7 சிறுகோள்களைக் கண்டறிந்ததற்காக அவருக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது.
சர்வதேச வானியல் ஆய்வு கூட்டமைப்பும், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் இணைந்து சிறுகோள்களைக் கண்டறிவதற்காக பொதுமக்களுக்காக நடத்திய போட்டியில் கலந்துகொண்டு தொலைநோக்கி மூலம் 7 சிறுகோள்களைக் கண்டறிந்தார் ஒலிவெரா.
இச்சிறுமி 2 வயதுக் குழந்தையாக இருக்கும்போது, வானில் நட்சத்திரத்தைப் பார்த்து, அதேபோன்று ஒரு பொம்மை நட்சத்திரத்தை தன் பெற்றோரிடம் கேட்டாராம். அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தமது மகளின் சிறுகோள் ஆய்வுக்காக அவர் சர்வதேச வானியல் ஆய்வு அமைப்பால் கெளரவிக்கப்படுவார் என்று. 6 வயதில் அறிவியல் கல்விப் பயிற்சி ஒன்றில் சேர்ந்த ஒலிவேரா, அதில் ஆர்வத்துடன் பயின்றார். கரோனா பெருந்தொற்று காலத்தில் சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை உருவாக்கி, சிறுகோள்கள், விண்வெளி பற்றி வானியல் ஆர்வம் கொண்ட 3 நண்பர்களுடன் விவாதித்து வருகிறார்.
அவரது சேனலுக்கு 1000 சந்தாதாரர்கள் உள்ளனர். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் 5,700 பேர் அவரைப் பின்தொடர்கின்றனர்.
அவரின் திறமையை அறிந்து பிரேசிலின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம், வானியல் தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றுமாறு ஒலிவெராவுக்கு அழைப்பு விடுத்தது. மேலும், அவர் தனது சொந்த நகரத்தில் உள்ள பள்ளிகளுக்கும் சென்று விண்வெளி தொடர்பாக உரை நிகழ்த்தி வருகிறார். ஒலிவெராவின் விண்வெளி ஆர்வத்துக்கு வானமே எல்லை!