19-ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய வடிவில் உருவாக்கப்பட்ட மெக்கானிக்கல் கணினிகள், பின்னர் பல்வேறு வகையில் நவீனமயமாக்கப்பட்டு கணினிகளாக 20-ஆம் நூற்றாண்டில் அனைத்து வகை செயல்பாடுகளிலும் அடியெடுத்து வைத்துவிட்டன. கணித பயன்பாட்டுக்காகவும், தகவல் சேகரிப்புக்காகவும் பயன்படுத்தப்பட்ட கணினிகள், இன்று மனிதர்கள் செய்யும் வேலைகளுக்கான மாற்றாகக் கருதப்படுகின்றன.
22-ஆம் நூற்றாண்டில் அனைவரும் பயன்படுத்தும் வகையில், சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்கும் முயற்சியில் ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவை இந்த சூப்பர் கம்ப்யூட்டர்களில் புகுத்தி புதிய உத்திகளைப் படைக்க மெட்டா முயன்று வருகிறது.
எதை வேண்டுமானாலும் நம் கண்களுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தும் மெய்நிகர் தொழில்நுட்பத்தை இந்த சூப்பர் கம்ப்யூட்டர்களில் இணைப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும்.
தற்போது உலகின் எந்த மூலையில் இருந்தவாறும் விடியோ அழைப்பில் வந்து பேசுவதைப்போல், மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் நேடியாகவே நம் முன் தோன்றி பேசுவதைப் போலத்தான் மெட்டா சூப்பர் கம்ப்யூட்டர்கள் செயல்பட உள்ளன.
உலகின் மிக வேகமான கணினியாக இவை அமையும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பல்வேறு மென்பொருள்களில் இயங்கும் வகையில் இதில் பங்கேற்று உரையாடுபவர்களின் விடியோ, புகைப்படங்களையும் ஒன்றிணைத்து இந்த சூப்பர் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இதில் உள்ள அதிநவீன கிராபிக்ஸ் சிப்கள் மெய்நிகர் தொழில்நுட்பத்தை உண்மையான வடிவில் இயக்க உதவும் என்றும் ஒரு குழுவில் உள்ளவர்கள் பல்வேறு மொழிகளைப் பேசினாலும் அந்த மொழியைக் கண்டறிந்து உடனடியாக மொழிப் பெயர்ப்பு செய்து எழுத்து வடிவிலும், ஒலி வடிவிலும் அளிக்கும் திறன் இந்த சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கு இருக்கும் என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் விலையையும், எங்கு வடிவமைக்கப்படுகிறது என்ற தகவலையும் மெட்டா நிறுவனம் அறிவிக்கவில்லை. எனினும், உலகின் முதல் சூப்பர் கம்ப்யூட்டர் நிகழாண்டில் மத்தியில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளதால் உலகமே இதனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.