மூளைக்கும் தேவை... பயிற்சிகள்!

மூளைக்கும் தேவை... பயிற்சிகள்!

உடலுறுப்புகளில் மூளை மிகவும் முக்கியமானது. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் விழிப்புணர்வுடன் வைத்திருக்க உதவும் மூளையை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, ஒவ்வொருவருக்கும்

உடலுறுப்புகளில் மூளை மிகவும் முக்கியமானது. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் விழிப்புணர்வுடன் வைத்திருக்க உதவும் மூளையை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. 

கணினியை விட பன்மடங்கு நினைவுத்திறனைக் கொண்டுள்ள உங்களின் மூளை ஆரோக்கியமானதாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் புத்திக்கூர்மையுடன் நல்ல நினைவுத்திறனுடன் இருக்க முடியும். நினைவுத்திறனை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்தால் மூளைக்கு சில பயிற்சிகளை அளிக்க வேண்டியது அவசியம். 

புதிர் போடுங்கள் :

மூளைக்கு ஒரு சிறந்த  பயிற்சி புதிர் விளையாட்டு. ஜிக்ஸா பஸ்ஸில்ஸ்  எனும் வெட்டப்பட்ட பல துண்டுகளைப் பொருத்தி அதன் முழுமையான உருவ அமைப்பைக் கொண்டு வருவதே ஜிக்சா புதிர் விளையாட்டு. உங்கள் மூளைக்குச் சவால் விடும் ஒரு பயிற்சி என்று கூறலாம். தவிர, கணிதம் தொடர்பான எந்தவொரு பயிற்சியையும் மேற்கொள்ளலாம். அதுபோல குறுக்கெழுத்துப் போட்டி, வார்த்தைகளைக் கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சிகளிலும் ஈடுபடலாம். 

விளையாட்டுகள்:

பொதுவாக சிந்திக்கும் திறன் கொண்ட ரம்மி, சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் மூளைக்கு சிறந்த பயிற்சி அளிக்கின்றன. கார்டுகளைப் பயன்படுத்தி விளையாடும் அனைத்து விளையாட்டுகளுக்கும் அதிக சிந்தனைத் திறன் தேவைப்படுவதால் மூளையின் நலனை மேம்படுத்துகிறது. அதேநேரத்தில் எந்தவொரு ஆன்லைன் விளையாட்டுக்கும் அடிமையாகாமல் இருப்பதும் நலம். 

சதுரங்க விளையாட்டு இயற்கையாகவே கணிதத்துடன் தொடர்புடையது.  

புதிய சொற்களைக் கற்றல்:

உங்களை புத்திசாலியாக வைத்திருக்க தினமும் புதிய சொற்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக பார்க்கும்போதும் கேட்கும்போதும் புதிய சொற்களை மனதில் நிறுத்தி அவற்றை எழுதி வைக்கவும் வேண்டும். 

பின்னர் குறிப்பிட்ட நாள் கழித்து அதனை மீண்டும் நினைவுபடுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது அந்த சொற்கள் உங்கள் மனதில் இருந்து என்றும் அழியாது. இதனால் உங்களுடைய மொழித்திறன் கூடுவதுடன் மூளைக்கு சிறந்த பயிற்சியாகவும் இருக்கும். அதுபோல வார்த்தைகளைக் கண்டுபிடிக்கும் விளையாட்டுகளிலும் ஈடுபடலாம். 

நடனமாடுங்கள்:

நடன அசைவுகள் உடலுக்கு மட்டுமின்றி மூளையின் செயல்பாடுகளுக்கும் நல்லது. புதிய நடன அசைவுகளை உன்னிப்பாக கற்கும்போது உங்கள் மூளையின் செயலாக்க வேகத்தையும் நினைவாற்றலையும் அதிகரிக்கும் என்பது ஆய்வுகளின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  

உணர்ச்சிகள் :

உடலில் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒரு செயல்/உணர்ச்சி இருக்கிறது. அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்தும்போது மூளைக்கு புத்துணர்வு கிடைக்கிறது. உதாரணமாக மூக்கு நுகர்வதற்கு பயன்படுகிறது அல்லவா? அதனைக்கொண்டு உங்களுக்குப் பிடித்த நல்ல வாசனைகளை உணர வேண்டும். இதனால் மூளையின் செல்கள் புத்துணர்வு அடையும். அதுபோல இனிமையான இசையைக் கேட்க வேண்டும். இதுபோல ஒவ்வொரு உறுப்புகளையும் கொண்டு அனைத்து வகை உணர்ச்சிகளையும் உணர வேண்டும். 

புதியனவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள்:

ன்றாடம் வழக்கமாக செய்யும் வேலைகளைத் தவிர்த்து புதியவற்றை கற்றுக் கொள்ள வேண்டும். புதிய வேலைகள் நமக்கு புதியனவற்றைக் கற்றுக் கொடுக்கும். மூளையும் புதியனவற்றை யோசிக்கும்போது அது மூளைக்கு நல்ல பயிற்சியாக அமையும். வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நல்ல புதிய செயல்களில் ஈடுபடும்போது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

இசையைக் கேளுங்கள் :

எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் எளிதில் கடந்துவிடும் ஆற்றல் இசைக்கு உண்டு. இசை ஒரு மனிதனை வேறொரு உலகத்துக்கு கொண்டு செல்லும். அதன்படி, மூளையின் சிறந்த செயல்திறனுக்கான பயிற்சிகளில் இசைக்கு என்றும் இடம் இருக்கும். மனதுக்கு இதமான சற்று அமைதியான இசையைக் கேட்பது உங்கள் மனதுக்கும் நினைவுக்கும் நல்லது. 

புதியன பழக்கவழக்கங்கள்:

வாழ்க்கையில் சிறுசிறு விஷயங்களை மாற்றுங்கள். உதாரணமாக தினமும் நீங்கள் பைக்கில் செல்பவராக இருந்தால் ஒருநாள் பேருந்தில் செல்லுங்கள். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். புதிய பழக்கவழக்கங்கள் வித்தியாசமான அனுபவங்களைத் தருகின்றன. 

அதுபோக அலுவலக வேலை நேரத்தை ஓரிரு நாள்கள் மாற்றலாம். இரவு டிவி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால் ஒரு நாள் புத்தகம் படிக்கலாம், புதிய பயிற்சிகளில் சேரலாம். இவ்வாறாக அன்றாடச் செயல்களை அவ்வப்போது சற்று மாற்றியமைப்பது சலிப்பிலிருந்து மீள உதவும். 

யோகாசனம் உடலுக்கும் மனதுக்கும் பெரும் அமைதி தரக்கூடியது யோகாசனம். நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் பலருக்கும் மன அமைதி தேவைப்படும் இச்சூழ்நிலையில் தினமும் ஒவ்வொரு வகையான யோகாசனங்களை செய்யுங்கள். உடலில் பல கோளாறுகளை சரி செய்ய வல்லது யோகாசனம். 

எவரொருவருக்கும் தங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்யும்போது கூடுதல் மகிழ்ச்சி உண்டாகும். இதுவும் மூளைக்கு புத்துணர்வு அளிக்கும். மூளையின் செல்கள் உருப்பெறுவது மட்டுமின்றி புதிய செல்கள் உருவாகும்.   உடல் இயங்க உணவு எடுத்துக்கொள்வதுபோல உடல் உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்க போதிய பயிற்சிகளை அளிக்க வேண்டும். மூளைக்கும் இது  பொருந்தும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com