"சித்தி'யில் தொடங்கி "வாணி ராணி' வரை கடந்த 25 ஆண்டுகளாக சின்னத்திரையில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். தற்போது நடித்து வரும் "வாணிராணி' தொடர் அக்டோபர் இறுதியில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தபடியாக ரடான் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமான புதிய மெகா தொடர் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது.
இதற்கு "சந்திரகுமாரி' என்று பெயரிட்டுள்ளனர். இந்த தொடருக்காக ராதிகா சரத்குமார் ஏழுவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் இந்தத் தொடர் தயாராகி வருகிறது. இந்தத் தொடருக்காக இசையமைப்பாளர் சிற்பி பின்னணி இசை அமைக்கிறார். பாலமுருகன், பிலிப் விஜயகுமார் இருவரும் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
சரித்திரமும், சமூகமும் கலந்து பயணிக்கப்போகும் இந்த தொடருக்காக, மும்பையிலும், சென்னையிலும் பிரம்மாண்டமான செட்டுகள் அமைத்து காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.
அரச குடும்பத்தின் கதையை பிரபல திரைப்பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பரபரப்பாக படமாக்க, நிகழ்கால காட்சிகளை சி.ஜே.பாஸ்கர் இயக்கியுள்ளார். அக்டோபர் இறுதிவாக்கில் சின்னத்திரையில் இந்த தொடர் ஒளிப்பரப்பாக உள்ளது.
இது குறித்து ராதிகா சரத்குமார் கூறியதாவது:
"என் திரைப்பயணத்தில் இது ஒரு மைல் கல். இதுவரை நான் நடிக்காத மிகவும் சவாலான கேரக்டர் இது என்று சொல்லலாம். "சந்திரகுமாரி' தொடருக்காக இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறேன். இந்த மெகா தொடர் மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் நிச்சயம் இடம் பிடிக்கும்.
- ஸ்ரீதேவி