""இந்த தொடரில் பலவிதமான சிறு தொழில்களை இதுவரை அறிமுகப்படுத்தி உள்ளோம். மேலும், பல தொழில்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம். இதனைப் படித்துவிட்டு, தென் மாவட்டங்களைச் சேர்ந்த தினமணி வாசகிகள் நிறையபேர் தொலைபேசியில் அழைக்கின்றனர். பெரும்பாலானவர்கள் கூறுவது இதுதான், ""நான் தொழிற் பயிற்சி எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ஆனால், என்னால் சென்னைக்கு வர இயலாது. எனவே, நான் என்ன செய்வது'' என்று கேட்கின்றனர்.
எனக்கும் பல ஊர்களுக்கு சென்று பயிற்சி அளிக்க விருப்பம்தான் . ஆனால், ஒவ்வொரு தனி நபருக்காக ஒவ்வொரு ஊருக்கும் சென்று பயிற்சி அளிப்பது என்பது இயலாது. எனவே, தொழிற்பயிற்சி பெற வேண்டும் என்று நினைப்போர் குறைந்தது 10-க்கும் மேற்பட்ட நபர்களை சேர்த்து அதன்பின்னர் தெரிவித்தால், நாங்கள் வந்து பயிற்சியளிக்க ஏதுவாக இருக்கும் என்பதை தோழிகளுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சரி இந்த வாரம் என்ன மாதிரியான தொழில் செய்யலாம்'' என்று பார்ப்போம் என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்.
இப்போதெல்லாம் மின்சாரம் தடைப்பட்டால் குறிப்பிட்ட காலஅளவுக்கு உபயோகப்படுத்தும்படி இன்வெர்ட்டர் வந்துவிட்டது. ஆனால், இன்வெர்ட்டர் பயன்பாடு என்பது இன்னும் முழுமையாக வரவில்லை, அநேக வீடுகளில் இன்னமும் விளக்கு, மெழுகுவர்த்தியை உபயோகிப்பவர்கள் அதிகம் இருக்கத்தான் செய்கின்றனர். மெழுகுவர்த்தி சாதாரணமாக கிடைக்கும். இது பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இதிலேயே சற்று வித்தியாசமாக அலங்காரமாக ஜெல் மெழுகுவர்த்தி செய்வது பற்றி பார்க்கலாம்.
தேவையானவை: ஜெல் மெழுகு, ஸ்டோன், ஜிகினா, சிப்பிகள், பீட்ஸ், மணிகள் கண்ணாடி குடுவை அல்லது சின்ன சின்ன கண்ணாடி கிளாஸ், மெழுகு திரி.
செய்முறை: ஸ்டவ்வில் தோசைக் கல் வைத்து சூடு பண்ணவும். அதன்மேல் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஜெல்லைப் போட்டு சூடு - செய்தால் ஜெல் கரைந்து தண்ணீர் போன்று ஆகிவிடும். தேவையெனில் அதில் நமது விருப்பத்திற்கு தகுந்தாற்போன்று வண்ணம் சேர்க்கலாம். பின்னர், ஒரு கண்ணாடி குடுவை அல்லது கண்ணாடி டம்ளரில் பீட்ஸ், சிப்பி, ஸ்டோன் போன்றவற்றை போடவும். மெழுகில் தோய்த்த திரியை நடுவில் வைத்து உருகி இருக்கும் ஜெல்லை ஊற்றவும். மேலே ஜிகினா தூவி விடவும். இதுமட்டுமின்றி நம் கற்பனைக்கு ஏற்றாற்போன்று இதனை விதவிதமாக செய்து விற்பனை செய்யலாம். இதை சாதாரண மெழுகு வர்த்தியை விட கூடுதல் விலைக்கு விற்க முடியும்.
ஜெல் மெழுகுவர்த்தியை பொருத்த வரை, அச்சில் வார்த்து பிறகு எடுத்து உபயோகப்படுத்த இயலாது. எந்த பொருளில் இதை ஊற்றுகிறோமோ அதிலேயேதான் உபயோகப்படுத்த வேண்டும். இதற்கு கண்ணாடி பாத்திரம் தான் சிறந்தது. அப்போதுதான் இந்த ஜெல், அதனுள் உள்ள பொருட்களை வெளிப் பார்வைக்கு அழகாக காண்பிக்கும்.
இந்த ஜெல் மெழுகுவர்த்தியில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது அந்தரத்தில் மிதப்பது போன்று தெரியும். இதுபோன்ற மெழுகுவர்த்திகள் சர்ச்சுகளில் ஏற்றி வழிபடவும், பிறந்த நாள் விழாக்கள், தீபாவளி, கார்த்திகை தீபம் ஆகிய பண்டிகை நாட்களில் ஏற்றி வைத்திட அழகான தோற்றத்தைக் கொடுக்கும். தற்போது மிகவும் பிரபலம் அடைந்து வரும் கலைப் பொருள்கள் தயாரிப்பில் இந்த ஜெல் மெழுகுவர்த்தியும் ஒன்று. எனவே, இதற்கு நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும்.