தினமணி மகளிர்மணி ( 12.12.2018) இதழில் வெளிவந்த "ஆதிவாசியால் குறிவைக்கப்பட்டேன்' கட்டுரை படித்தேன். அவர்கள் நல்லவர்களாக, இலகுவான மனம் படைத்தவர்களாக, யாருக்கும் தீங்கிழைக்காதவர்களாகவே தெரிகின்றனர். இவ்வளவு நல்லவர்கள் அந்நியரை கொள்கின்றனர் என்றால் வெளிநபர்களால் தங்களுக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயத்தினால்தான் என்பதை உணர முடிகிறது.
க.சுல்தான் ஸலாஹீத்தீன், காயல்பட்டினம்.
19.12.2018 இதழில் வெளிவந்த "பறவையாய் பறக்க நினைக்கிறேன்' கட்டுரை படித்தேன். ஸ்ரீதேவி என்பவர் தனிமையில் பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றி வருவது அருமை! பாரதி படைத்த புதுமை பெண் எனலாம். மூன்று முதுகலை பட்டங்களை பெற்றும் முனைவர் பட்டத்திற்கான ஆய்விலும் ஈடுபட்டுள்ளார் என்பது பாராட்டத்தக்கது. அனுபவிக்க பிறந்தவர் அவர். வாழ்க! வளர்க!
ரெ.சுப்பாராஜீ, கோவில்பட்டி.
"7 வயதில் தூய்மை இந்தியா தூதுவர்' கட்டுரை படித்தேன். கழிப்பறை கட்டிக் கொடுக்க வேண்டுமென பலமுறை கேட்டும் கழிப்பறை கட்டிக் கொடுக்காமல் தட்டிக்கழித்த தந்தைக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் செய்த சிறுமி ஹனீபா ஜாராவின் செயல் விநோதமாக இருந்தாலும் நல்ல நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு என்பது பாராட்ட வேண்டும். திறந்தவெளி கழிப்பறைகளால் ஏராளமான பிரச்னைகள் உள்ளது என்பதை நன்கு புரியும்படி சுகாதார ஆய்வாளர்கள் கிராமங்கள் தோறும் நல்ல விழிப்புணர்வை உண்டாக்கி கழிப்பறை இல்லாத வீடுகளே இல்லை என்னும் நிலையை உருவாக்க வேண்டும்.
மா.பழனி, பென்னாகரம்.
"திருநங்கைகளுக்கு கல்வி மிகவும் அவசியம்' கட்டுரை படித்தேன். கர்நாடகாவில் கதக் நகரத்தில் பிறந்த திருநங்கை நித்து, சுயமுயற்சியால் முன்னேறி இப்போது பெங்களூரில் தொழில்முனைவோராக கௌரவத்துடன் வாழ்கிறார் என்பது பாராட்டுக்குரியது. இதுபோன்று மற்ற திருநங்கைகளும் யோசித்தால் வாழ்வில் முன்னேறலாம்.
அ.கல்பனா, அடையாறு.