படம் தோல்வியடைந்ததால் மனமுடைந்த நடிகை!
"தங்கல்' படத்தின் மூலம் பிரபலமான பாத்திமா சானா ஷேக், தனது அடுத்த படமான "தக்ஸ் ஆப் இந்துஸ்தான்' படத்தை ஆவலோடு எதிர்பார்த்தார். படம் தோல்வியடையவே பாத்திமா, மனமுடைந்து போய்விட்டாராம். "தங்கல்' படத்தைப் போலவே அடுத்து விளையாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்படவிருந்த பட வாய்ப்பை வேண்டாமென்று நிராகரித்த பாத்திமா, "தக்ஸ் ஆப் இந்துஸ்தான்' தோல்விக்குப் பின் ராஜ்குமார் ராவுடன் நடிக்கும் படமாவது தனக்கு படவுலகில் நிரந்தரத்தைத் தேடி தருமா? என்று எதிர்பார்க்கிறார்.
மணிகர்னிகா என்னுடைய இயக்கத்தில் உருவானது!
"மணிகர்னிகா - தி குயின் ஆப் ஜான்சி' என்ற வரலாற்றுப் படத்தை முதலில் இயக்கிய ராதாகிருஷ்ணா ஜாகர்லமூடி, முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி. ஆரின் வரலாற்றை இயக்க ஒப்புக் கொண்டதால், மணிகர்னிகாவை விட்டு விலகினார். படம் முடியும் தறுவாயில் இருந்ததால் மேற்கொண்டு படத்தை முடித்துத் தரும் பொறுப்பை அதில் கதாநாயகியாக நடிக்கும் கங்கனா ரணாவத் ஏற்றுக் கொண்டார். ஆனால் பெரும் பகுதியை மீண்டும் ரீ ஷூட் செய்த கங்கனா, ""இது முழுக்க முழுக்க என்னுடைய கண்ணோட்டத்தில் உருவானது. திரைக்கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை'' என்கிறார். இத்திரைப்படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, ஜனவரி 25ஆம் தேதி 50 நாடுகளில் 3 ஆயிரம் திரையரங்குகளில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ராஜ்குமார் குடும்பத்திலிருந்து ஒரு நடிகை!
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகள் பூர்ணிமாவின் மகள் தன்யா ராம்குமார், கன்னடத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ராஜ்குமார் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையில் ஒருபெண் நடிகையாவது இதுவே முதல்முறையாகும். ""என்னுடைய தாத்தா ராஜ்குமார் இருந்திருந்தால் என்னை நடிக்க அனுமதித்திருப்பாரா என்று சிலர் கேட்கிறார்கள். நிச்சயம் அனுமதித்திருப்பார் என்ற நம்பிக்கையுடனும், என்னுடைய பெற்றோர் பூர்ணிமா - ராம்குமார் அனுமதியுடனும் நடிக்க வந்துள்ளேன்'' என்கிறார் தன்யா ராம்குமார்.
தொழிலும் வாழ்க்கையும் வெவ்வேறு!
""நான் எப்போதுமே சுதந்திரமானவள். கடந்த 14 -ஆண்டுகளாக நடிகையாக இருந்து வந்தாலும், என் தொழிலைப் பொறுத்தவரை நானே தான் முடிவெடுப்பேன். இதேபோன்று என் கணவர் விராட் கோலியும் அவரது தொழிலைப் பற்றி அவரேதான் முடிவெடுப்பார். ஒருவர் விஷயத்தில் மற்றவர் குறுக்கிடுவதில்லை. என் தனிப்பட்ட வாழ்க்கையிலாகட்டும் தொழிலில் ஆகட்டும். இரண்டிலும் வெவ்வேறாகத்தான் முடிவெடுப்பேன்'' என்கிறார் அனுஷ்கா சர்மா.
நடிகையான பொறியியல் பட்டதாரி
"கே ஜி எப்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டி, ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். பன்னாட்டு நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த இவர், கடந்த 2016- ஆம் ஆண்டு பெங்களூரு அழகிப் போட்டியில் சிறந்த அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதலே சினிமா வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தன. "கே.ஜி.எப்' படத்தில் ரீனா என்ற பாத்திரத்தில் நடிக்க இயக்குநர் பிரசாந்த் நீல் இவரை அணுகியபோது மறுப்பு ஏதும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டாராம். இந்தப் படத்தின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்குமென எதிர்பார்க்கிறார் ஸ்ரீநிதிஷெட்டி.
கிருஷ்ணகுமாரி பாத்திரத்தில் பிரணிதா!
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில், என்.டி.ஆருடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை கிருஷ்ணகுமாரி பாத்திரத்தில் பிரணிதா சுபாஷ் நடித்து வருகிறார். ""என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்றில் பிரபலமான பல நடிகர்- நடிகைகள் நடித்துவரும் நிலையில் கிருஷ்ணகுமாரி வேடத்தில் நடிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு எதிர்பாராத அதிர்ஷ்டம்'' என்கிறார் பிரணிதா சுபாஷ்.