படித்தது தமிழகத்தில்...

மருத்துவ துறையில் விஞ்ஞானியாகவும் ஆளுமையாளராகவும் விளங்கும் டாக்டர் ககன்தீப் காங் இந்தியாவிற்கு ஒரு புதிய பெருமையை சென்ற வாரம் சேர்த்திருக்கிறார்
படித்தது தமிழகத்தில்...

மருத்துவ துறையில் விஞ்ஞானியாகவும் ஆளுமையாளராகவும் விளங்கும் டாக்டர் ககன்தீப் காங் இந்தியாவிற்கு ஒரு புதிய பெருமையை சென்ற வாரம் சேர்த்திருக்கிறார். இந்தியக் குடிமகளாக தனது அறிவியல் பங்களிப்பால் இந்தப் பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார்.
மனித குல பயன்பாட்டிற்காக , பாதுகாப்பிற்காக , உடல் நலத்திற்காக புதிய கண்டுபிடிப்புகள் காலத்தின் கட்டாயங்களாகின்றன. பல்வேறு கால கட்டங்களில் விஞ்ஞான தேடல்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை மனித சமுதாயத்திற்கு அன்பளிப்பு செய்துவரும் விஞ்ஞானிகளை 360 ஆண்டுகளாக கெüரவித்து வருகிறது லண்டன் நகரில் செயல்பட்டு வரும் ராயல் சொஸைட்டி. சர்வதேச அறிஞர் பெருமக்களால் பெரிதும் மதிக்கப்படும் இந்த அமைப்பின் உறுப்பினராக (Fellow) இந்த ஆண்டு டாக்டர் ககன்தீப் காங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பெருமையைப் பெரும் முதல் இந்திய பெண்மணி, டாக்டர் ககன்தீப் காங் ஆவார். இந்த ஆண்டு (2019) பல நாடுகளை சேர்ந்த 51 விஞ்ஞானிகளை அடையாளம் கண்டு மனித குலத்திற்கு அவர்கள் செய்த அரிய பங்களிப்பிற்காக ராயல் சொசைட்டியின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். டாக்டர் ககன்தீப் தவிர ஐந்து இந்திய விஞ்ஞானிகளும் இந்த பட்டியலில் உள்ளனர். இந்தப் பெருமை பெரும் இந்தியர்களில் டாக்டர் ககன்தீப் மட்டுமே பெண்மணி. மற்ற இந்தியர்கள் ஆண் விஞ்ஞானிகள் .
ராயல் சொசைட்டியில் அங்கீகாரம் கிடைப்பது.. கௌரவிக்கப்படுவது கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று என்பது உலக அரங்கில் புகழ் பெற்றிருக்கும் விஞ்ஞானிகள் அனைவருக்கும் தெரியும். அந்தக் காலத்து விஞ்ஞானிகளான ஐசக் நியூட்டன், சார்லஸ் டார்வின், மைக்கேல் ஃபாரடே, அல்பெர்ட் ஐன்ஸ்டைன் போன்ற அறிவியல் ஜாம்பவான்கள் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர்கள். கவுரவிக்கப்பட்டவர்கள். அந்த வரிசையில் இந்திய பெண்மணி ஒருவருக்கு முதன்முதலாக இடம் கிடைத்திருப்பது சாதாரண விஷயமில்லை. ,
ராயல் சொஸைட்டி கி. பி 1660-இல் தொடங்கப்பட்டாலும், இந்த அமைப்பின் உறுப்பினர் ஆகும் தகுதியைப் பெற்ற முதல் இந்தியர் அர்தஷீர் கர்செட்ஜீ வாடியா. 1841-இல் தான் இவருக்கு இந்தப் பெருமை வழங்கப்பட்டது. பிறகு இந்தப் பெருமை ஒரு சில இந்தியர்களுக்கே கிடைத்தது. விரல் விட்டு எண்ணிவிடலாம். கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்துக்கு 1918 }லும், சுப்ரமணியன் சந்திரசேகருக்கு 1944 }லும், வெங்கடராமன் ராமகிருஷ்ணனுக்கு 2003- லும், அஜய் குமார் சூடுக்கு 2015-லும், சுபாஷ் காட்டுக்கு 2017-லும் ராயல் சொசைட்டியில் "ஃபெல்லோ' கெüரவம் வந்து சேர்ந்தது. ஆனால் இந்தப் பெருமை பெற்றவர்களில் இந்திய பெண்மணி ஒருவர் கூட இல்லை என்பது மிகவும் ஏமாற்றத்தை தந்து வந்தது. அந்த குறையை டாக்டர் ககன்தீப் தீர்த்து வைத்திருக்கிறார்.
டாக்டர் ககன்தீப் யார் ?
மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் நிர்வாக இயக்குனராக டாக்டர் ககன்தீப் பணியாற்றி வருகிறார். இந்த ஆராய்ச்சி நிலையம் ஃபரிதாபாத்தில் உள்ளது.
மருத்துவ துறையில் பிரபல விஞ்ஞானியாக இருக்கும் ககன்தீப், குழந்தைகளைத் தாக்கும் ரோட்டாவைரஸ் போன்ற கிருமிகளை எப்படி ஒழிப்பது என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருபவர். ககன்தீப் எழுதிய முன்னூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் சர்வதேச அறிவியல் இதழ்களில் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் பல்வேறு குழுக்களில் டாக்டர் ககன்தீப் அங்கம் வகிக்கிறார். இந்தியாவில் பத்து தரமான நிறுவனங்கள் டாக்டர் ககன்தீபிற்கு விருதுகள் வழங்கி கெüரவித்துள்ளன.
டாக்டர் ககன்தீப் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் 1982 முதல் 1991 வரை படித்தவர். 1998 ல் மருத்துவ ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார். ஹூஸ்டனில் சில காலம் ஆராய்ச்சியில் செலவு செய்த ககன்தீப் இந்தியா திரும்பினார். சிஎம்சி மருத்துவ கல்லூரியில் வயிறு-குடல் துறையின் தலைவராகவும், நுண்ணுயிரியல் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். குழந்தைகளைத் தாக்கும் வைரஸ் நோய் கிருமிகளை அழிப்பது குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டார். குழந்தைகள் நலனுக்காக ககன்தீப்பின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு ராயல் சொசைட்டியின் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
- கண்ணம்மா பாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com