4 வயது அதிசயம்!
அறிவியல் துறை வல்லுநர்களே, மனப்பாடம் செய்ய தடுமாறும், வேதியியல் பிரிவின், 118 தனிமங்களை மனப்பாடம் செய்து, தடையின்றி ஒப்புவித்து அசத்துகிறார் தாம்பரம் அருகே உள்ள, முடிச்சூரைச் சேர்ந்த, 4 வயது சிறுமி உதிதா. இது குறித்து அவர் தந்தை மாரிச்செல்வன்கூறுகையில்:
"எனது மனைவி தீப்தி ஆனந்தி டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்காக வேதியியல் பாடப்பிரிவில் உள்ள, 118 தனிமங்களின் பெயர்களை படித்துக் கொண்டிருக்கும் போது யூ.கே.ஜி. படித்துக் கொண்டிருக்கும் எனது மகள் உதிதாவும் சேர்ந்து, 80 தனிமங்கள் பெயரை அவ்வப்போது, விளையாட்டுத் தனமாக சொல்லிக்கொண்டிருந்தார். இதையடுத்து மீதமுள்ள, 38 தனிமங்களின் பெயர்கள், நம் நாட்டின் மாநிலங்கள், தலைநகரங்கள், யூனியன் பிரதேசங்களின் பெயர்களை கற்றுக் கொடுத்தோம். குழந்தை என்பதால், விளையாட்டுத் தனமாகவே, அனைத்தையும் முழுவதுமாக கற்றுக் கொண்டார்.
தனிமங்கள், மாநிலங்களின் பெயர்களை, மனப்பாடமாக, உதிதா கூற ஆரம்பித்தவுடன் அதை, உலகிற்கு தெரியப்படுத்த விரும்பினோம். அதற்காக, இணையதளத்தில் தேடியபோது, "இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' குறித்த, விவரங்கள் அறிந்து விண்ணப்பித்தோம். தற்போது, உதிதாவிற்கு "இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' சான்றிதழ் கிடைத்திருப்பதோடு "கூர்மையான அறிவுடைய குழந்தை' எனும் பட்டத்தையும் வழங்கி உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தனிமங்களை தொடர்ந்து, மனித உடற்கூறியல் குறித்து, உதிதாவிற்கு கற்றுக் கொடுத்து வருகிறோம். அதை, மனப்பாடமாக சொல்லிவிட்டால், "கின்னஸ்' சாதனை புத்தக முயற்சிக்கு விண்ணப்பிக்க உள்ளோம்'' என்றார்.
- ரிஷி