சாதிப்பதற்கு என்றுமே வயது தடையில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் உலக குத்துச்சண்டை சாம்பியனான மேரி கோம்.
தனது அபார ஆட்டத் திறனுக்காக "மேக்னிபிஷியன்ட் மேரி' என குத்துச்சண்டை உலகில் அழைக்கப்படும் மேரி கோம் மணிப்பூரில் கடந்த 1.3.1983-இல் பிறந்தவர்.
ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், பள்ளியில் பயின்ற போது அனைத்து விளையாட்டுகளில் பங்கேற்பதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த 1998-இல் பாங்காக்கில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் மணிப்பூரைச் சேர்ந்த டிங்கோ சிங் குத்துச்சண்டையில் தங்கம் வென்றிருந்தார். இதனால் உந்தப்பட்ட மேரி குத்துச்சண்டைக்கு மாறினார். மாநில அளவில் முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
திருமணமாகியும் தொடர்ந்த பயிற்சி:
தொடர்ந்து திருமணமாகி 2 குழந்தைகளைப் பெற்ற பின்னரும் ஆர்வத்துடன் பயிற்சியைத் தொடர்ந்த மேரி கோமுக்கு அதன்பின் தொடர் வெற்றி பயணமாக அமைந்தது.
2001-இல் வெள்ளியும், அதன்பின் 2002, 2005, 2006, 2008, 2010, 2018 உலகப் போட்டிகளில் 6 தங்கப் பதக்கத்துடன் சாம்பியன் பட்டத்தை வென்றார். 2012 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார்.
இந்நிலையில் ரஷியாவின் உலன் உடே நகரில் தற்போது நடந்து வரும் உலக சாம்பியன் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்துள்ள மேரி கோம் 8-ஆவது முறையாக பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார். அரையிறுதிக்கு தகுதி பெற்றதாலேயே வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் மேரி. இதன்மூலம் இதற்கு முன்பு கியூபா வீராங்கனை பெலிக்ஸ் சாவோனின் 7 பதக்க சாதனையை
முறியடித்துள்ளார்.
- பா.சுஜித்குமார்.