தமிழ் சினிமாவில் "மீ டூ' சர்ச்சையை ஏற்படுத்திய பின்னணி பாடகி சின்மயி தற்போது, சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். அதில் அவ்வப்போது பெண்கள் தன்னிடம் கூறும் "மீ டூ' புகார்களை பதிவிட்டும், பகிர்ந்தும் வருகிறார். இவரது செயல்களுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சின்மயியின் தாயார் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் கலந்து கொண்டு "தேவதாசி' முறையை ஆதரித்துப் பேசியதாக கூறப்படுகிறது. அதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்க, "என் அம்மாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. தேவதாசி முறையை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். ஆனாலும் என் அம்மா தெரிவித்த கருத்துக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்' என்று கூறியுள்ளார்.