கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சி பெண்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்குகிறார். இதில் பங்கேற்ற மதுரையைச் சேர்ந்த 31 வயதான மாற்றுத் திறனாளி பெண் கெளசல்யா கார்த்திகா முதல் முறையாக 1 கோடி ரூபாய் ஜாக்பாட் தொகையை வென்று உலக அளவில் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
ஒரு வயது குழந்தையின் தாயான கெளசல்யா கார்த்திகா வாய் பேச முடியாதவர் ஆவார். அவருக்கு கேட்கும் திறனும் இல்லை. அதிர்வுகள் மற்றும் மற்றவர்களின் வாய் அசைவு மூலம் மட்டுமே அவரால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும். முதுகலையில் எம்.எஸ்.சி தகவல் தொழில்நுட்பம் மற்றும் எம்.பி.ஏ படிப்புகளில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ள அவர், தற்போது மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஜூனியர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சி பற்றி அவர் கூறுகையில், ""என் குழந்தை பருவத்திலிருந்தே நான் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும், அதில் சிறந்து விளங்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தேன். அந்த வகையில் எனக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பளித்து எனது கனவை நனவாக்கிய கலர்ஸ் தொலைக்காட்சிக்கு நான் உண்மையில் நன்றி சொல்ல வேண்டும். ராதிகா மேடத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
எனக்கு கிடைத்திருக்கும் 1 கோடி ரூபாய் பணத்தில் ஒரு தொகையை நான் படித்த நாகர்கோவிலில் உள்ள வாய் பேசமுடியாத, காது கேளாதோர் பள்ளிக்கு வழங்க உள்ளேன். அதனைத் தொடர்ந்து இந்த பணத்தை கொண்டு இத்தாலி அல்லது சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுலா செல்லவிருக்கிறேன். ஏனெனில் அது எனது வாழ்நாள் கனவாகும்'' என்று தெரிவித்தார்.
-ரிஷி