மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கரோனா வார்டில் செவிலியர்களாகப் பணியாற்றிய சகோதரிகளை மக்கள் பாராட்டி பூங்கொத்து கொடுத்து மகிழ்வித்தனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமுதா (52), முத்துமீனா (50), தவமணி (48) ஆகிய சகோதரிகள் செவிலியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். கரோனா தொற்று ஆரம்பித்தவுடன் இவர்கள் அனைவரும் கரோனா வார்டில் பணியமர்த்தப்பட்டனர். தங்களது பணியைச் சிறப்பாகச் செய்து முடித்து 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின் வீடு திரும்பினார். அவர்களை அந்தப் பகுதி மக்கள் பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தி, ஆரத்தி எடுத்து வரவேற்று வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த விடியோ பரவி வருகிறது.
""எப்போதும் போல் எங்கள் பணியைச் செய்து முடித்து இருக்கிறோம். ஆரம்பத்தில் சற்று பயமாக இருந்தது. அரசாங்கம் எங்களுக்குக் கொடுத்த பாதுகாப்பு உடை மற்றும் கவசங்களை அணிந்து கொண்டதால் மருத்துவப் பணி சிறப்பாகச் செய்ய முடிந்தது'' என்கிறார்கள்.
தங்களது குடும்பம், கணவன், குழந்தைகள் என அனைவரையும் விட்டு விட்டு, பரவும் கொடிய நோயான கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையை விட்டு எங்கும் செல்லாமல், கண் இமைக்காமல் பரிவுடன் கவனித்து வருகிறார்கள் செவிலியர்கள். நிச்சயம் இவர்கள் போர் வீரர்களுக்கு நிகரானவர்கள்.