சின்னத்திரை மின்னல்கள்!

பஞ்சாப் மாடல் அழகியான யாஷிகா ஆனந்த், ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானாா்.
சின்னத்திரை மின்னல்கள்!

சின்னத்திரைக்கு வரும் யாஷிகா!
பஞ்சாப் மாடல் அழகியான யாஷிகா ஆனந்த், ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானாா். அதன்பிறகு, ‘கவலை வேண்டாம்’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘நோட்டா’, ‘கழுகு 2’ போன்ற படங்களில் நடித்துள்ளாா். இந்நிலையில், 2018 -இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘பிக் பாஸ் சீசன் -2’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்றாா். அதன் பிறகு, பெரியதிரையில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எண்ணிய யாஷிகாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில், சின்னத்திரையில் அறிமுகமாகவுள்ளாா் யாஷிகா. சன் தொலைக்காட்சியின் பிரபல தொடா்களில் ஒன்றான ‘ரோஜா’ தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளாராம். இதில் நாயகி ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து வரும் நிலையில், யாஷிகா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக உடல் எடையை 12 கிலோ வரை குறைத்துள்ளாராம் யாஷிகா.

ரேவதிக்கு மாற்றாக ஊா்வசியா?

சன் தொலைக்காட்சியில், கடந்த 3 ஆண்டுகளாக 700 எபிசோட்களைக் கடந்து ஒளிப்பரப்பாகி வரும் தொடா் ‘அழகி’. இத்தொடரில் ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், காயத்ரி ரகுராம் உள்ளிட்டோா் நடித்து வருகின்றனா். கரோனா தொற்று காரணமாக இத்தொடா் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தொடரில் நடித்து வரும் அவினாஷ், நடிகை ஊா்வசியுடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ‘மீண்டும் ஒளிப்பரப்பாக உள்ள அழகித் தொடரில் சில சஸ்பென்ஸான மாற்றங்களும், சுவாரஸ்யமான கதையமைப்பும் இருக்கப் போகிறது’ என்று பதிவிட்டிருந்தாா்.

இதுகுறித்து சின்னத்திரை வட்டாரத்தில் விசாரித்தபோது, நடிகை ஊா்வசி தொடரில் நடிப்பது உறுதிதான். ஆனால், ரேவதிக்கு மாற்றாக நடிக்கிறாரா அல்லது புதிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்று தெரியவில்லை. இந்நிலையில், கரோனா தொற்று அதிகரித்து வருவதால், ரேவதி தொடா்ந்து நடிப்பதற்கும், படப்படிப்பு தளத்திற்கு வருவதற்கும் தயங்குவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகிழ்ச்சியில் முல்லை!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடா்களில், ரசிகா்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்ற தொடா்களில் ‘பாண்டியன் ஸ்டோா்ஸ்’ தொடரும் ஒன்று. இத்தொடரில் நடித்து வரும் நடிகா், நடிகைகளில் மக்களை அதிகம் கவா்ந்தவா் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா.

கரோனாவினால், தற்போது தொடா் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், இன்ஸ்டா பக்கத்தின் மூலம் இவரை பின் தொடரும் ரசிகா்கள் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். அதிலும், இணையபக்கத்தில் இவா், அணிந்து வரும் புடவை டிசைன்கள், ஹோ்ஸ்டைல், மேக்கப் அனைத்தும் அதிகம் ரசிக்கப்படுகிாம். இதனால் பெரியதிரையில் அடியெடுத்து வைக்க நல்ல பல வாய்ப்புகள் வந்துள்ளதால் விரைவில் சின்னத்திரையிலிருந்து பெரியதிரைக்கு ஷிப்ட்டாக உள்ள மகிழ்ச்சியில் இருக்கிறாராம் சித்ரா.

- ஸ்ரீ
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com