திவ்யா சத்யராஜ் நன்கு அறியப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர். உலகின் மிகப் பெரிய மதிய உணவுத் திட்டமான "அக்ஷய பாத்ரா'வின் விளம்பரத் தூதுவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேடுகளை பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து துறையில் செய்த சேவைகளை அங்கீகரித்து அமெரிக்காவின் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. டாக்டர் பட்டம் பெற்றவர்களை கௌரவிக்க அமெரிக்காவில் நடைபெறவிருந்த விழா, கொவைட்- 19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டாக்டர் பட்டம் குறித்து திவ்யா கூறுகையில்: "" நான் புத்திசாலி மாணவி கிடையாது. ஆனால் கடின உழைப்பாளி. "அறிவாளியாக இருப்பதைவிட உழைப்பாளியாக இருப்பதுதான் சிறந்தது' என்று அப்பா சொல்லியிருக்கிறார். ஆரோக்கியமான வாழ்க்கை, வசதி உள்ளவர்களுக்குதான் என்பது நியாயம் கிடையாது.
தமிழ்நாட்டில் குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில் ஓர் இயக்கம் ஆரம்பிக்க உள்ளேன். வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களும் கரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவு தேவை'' என்கிறார்.