இந்திய விமானப்படையில் பெண்கள் பல்வேறு பணிகளில் பணியாற்றியபோதும், போர் விமானங்களை இயக்கும் பணியில் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் 2015-ஆம் ஆண்டு பெண்களை, போர் விமானிகளாகப் பணியாற்ற அனுமதியளித்தது. அதைத்தொடர்ந்து மோகனா சிங், பாவனா காந்த், அவனி சதுர்வேதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு இவர்கள் போர் விமானிகளாகப் பதவியேற்றனர். இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு சர்வேஷ் மேவரா, "தேஜஸ்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் போர் விமானியாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கங்கனா ரணாவத், “"தேஜஸ்' படக்குழு தனது பயிற்சிப்பட்டறையைத் தொடங்குகிறது. மிகவும் திறமை வாய்ந்த இயக்குநர் சர்வேஷ் மேவரா மற்றும் விங் கமாண்டர் அபிஜித் கோகலே ஆகியோருடன் இணைந்து பணிபுரியத் தொடங்குவது மகிழ்ச்சியாக உள்ளது' என கூறியுள்ளார்.