உலகின் பெரும்பாலான பகுதிகளில் சுலபமாக முட்டை கோஸ் கிடைக்கும். கி.மு.200 -ஆம் ஆண்டில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் பயன்படுத்தியிருப்பது வரலாற்றில் பதிவாயிருக்கிறது.
உணவு உண்பதற்கு முன் முட்டைகோஸ் கொஞ்சம் உண்ணும் பழக்கம் ரோமானியர்களிடம் இருந்தது.
அந்நாளில் மாமிசம் போன்ற உணவுப் பொருட்கள் கெட்டுவிடாமல் இருக்க முட்டை கோஸ் இலைகளை சுற்றி வைத்து பாதுகாக்கும் வழக்கம் செவ்விந்தியர்களிடம் இருந்தது.
கிபி 5 -ஆம் நூற்றாண்டில் சீனா, போலந்து, எகிப்து, லெபனான் நாடுகளுக்கு பரவி இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களால் 1794 -ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
இந்தியா முழுவதும் பயிரிடப்பட்டாலும் அதிகமாக விளைவது இமாச்சலப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில்தான்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயப் பிரிவு மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு அவசியம் பயன்படுத்த வேண்டிய 20 வகை காய்கறிகளில் முட்டை கோஸூம் ஒன்று என 1984- ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறது.
ஒரு கிண்ணம் முட்டைகோஸில் ஒரு நாளில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி யில் மூன்றில் ஒரு பாகம் கிடைக்கிறது. கோஸின் மேல்புறம் உள்ள பச்சை நிற இலைகளில் வைட்டமின் ஏயும் இரும்பு சத்தும் அதிகம்.
குடல் புற்று நோய்க்கு சிறந்த மருந்து என உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரம் மூன்று முறையாவது பயன்படுத்தினால் குடல் புற்று நோய் வராமல் தடுக்கும்.