இந்திய கிரிக்கெட் வீரரான தோனி வெப் சீரிஸ் தயாரிக்கப் போவதாகத் தகவல் வந்துள்ளது. இந்த தகவலை அவரது மனைவி சாக்ஷி அவரது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அறிமுக எழுத்தாளரான தோனியின் மனைவி சாக்ஷி புராண கதைகளையும்,இதிகாசக் கதைகளையும் ஒன்றிணைத்து ஒரு புதிய கதை அமைப்பை உருவாக்கி வருகிறார். அந்தக் கதையைக் கேட்ட தோனி நாமே வெப் சீரிஸ்ஸாக தயாரிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார். உடனே, "தோனி என்டெர்டைன்மெண்ட்' என்கிற பெயரில் அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்பின் பேரில் "வெப்சீரிஸ்' தயாரிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக இத்தகவலை அறிவித்து இருக்கிறார்.
ஒரு அகோரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சாக்ஷி.
தோனி கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போது சாக்ஷி, 'நீங்கள் சாதித்ததைப் பற்றி நீங்கள் பெருமைப்பட வேண்டும். உங்கள் விளையாட்டிற்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கு வாழ்த்துகள். உங்களை குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் விரும்பிய கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் போது நீங்கள் எவ்வளவு கண்ணீரை கட்டுப்படுத்தி இருப்பீர்கள் என்று நான் அறிவேன். உங்களுடைய ஆரோக்கியம், மகிழ்ச்சியை நான் விரும்புகிறேன்'' என்றும் தன் சுட்டுரையில் தெரிவித்திருந்தார்.
சாக்ஷியின் பதிவு பலரின் மனதை நெகிழ வைத்தது. தற்போது அவர் எழுதியுள்ள கதை எப்போது வெப்சீரிஸ்ஸாக வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள் தோனியின் ரசிகைகள் .