கரோனா பொது முடக்க காலத்தை பயனுள்ள வகையில் மாற்றியுள்ளார் ஸ்ருதிஹாசன். தனித்துவமான பாடல்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட இவர், தற்போது "எட்ஜ்' என்ற பெயரில் இது வெளியாகியுள்ளது. இது விரைவில் வெளியாகவுள்ள ஆல்பத்தின் முக்கிய அங்கமான பாடலாகும்.
"எட்ஜ்' பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உணர்வுகளின் எல்லை வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் கொள்ள பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். இது ஸ்ருதிஹாசனின் மற்றொரு பரிமாணம். இதற்கு எந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதெல்லாம் எண்ணாமல் வெளியிட்டார் ஸ்ருதிஹாசன். ஆனால் இதற்கு கிடைத்த வரவேற்பு அவரை திக்கு
முக்காடச் செய்திருக்கிறது என்று சொல்லலாம்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தேவிஸ்ரீ பிரசாத், தமன், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, நடிகர்கள் ஹ்ரித்திக் ரோஷன், மகேஷ் பாபு, ராணா, நாக சைத்தன்யா, விஷ்ணு விஷால், விக்ரம் பிரபு, நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, இயக்குநர் க்ரிஷ், ஆறுமுக குமார், நாக் அஸ்வின், கோபிசந்த், பாலாஜி மோகன், பாடகர் ஹரிசரண், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலருடைய பாராட்டால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஸ்ருதிஹாசன். தனது முதல் பாடலுக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால், தொடர்ச்சியாக பாடல் உருவாக்குவதிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.
இந்தப் பாராட்டுகள் தொடர்பாக ஸ்ருதிஹாசன்....
"உண்மையில் ஒருவித பயத்தோடு தான் வெளியிட்டேன். ஆனால், இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இது எனது குழுவினரின் கூட்டு முயற்சி. இதில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. ஏ.ஆர்.ரஹ்மான், சுரேஷ் ரெய்னா , ஹ்ரித்திக் ரோஷன், மகேஷ் பாபு என பல்வேறு பிரபலங்களின் வாழ்த்து ட்வீட்களைப் பார்க்கும் போது ரொம்பவே மகிழ்ச்சியடைந்தேன்.
கண்டிப்பாக இந்தப் பாராட்டை தலைக்கு ஏற்றாமல், மனதளவில் வைத்து மகிழ்ச்சி யடைவேன், இந்தப் பாராட்டுகள் அனைத்துமே என்னை தொடர்ச்சியாக இன்னும் வேகமாக இயங்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பிரபலங்கள் பாராட்டியது மட்டுமன்றி சமூக வலைதள பயனர்கள் பலரும் பாடலைக் கேட்டுவிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அனைவருக்குமே என் சிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
கரண் பாரிக் இணைந்து தயாரித்துள்ள "எட்ஜ்' பாடலில் ஸ்ருதிஹாசன் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளார். பாடலை அவர் எழுதி, பாடியது மட்டுமன்றி பாடலை பதிவு செய்து, இயக்குநரும் படத்தொகுப்பாளருமான சித்தி படேல் உடன் இணைந்து விடியோவையும் பொது முடக்கக் காலத்தில் படமாக்கியுள்ளார்.
இந்த பாடல் தற்போது இணைய தளங்களில் உலா வருகிறது.