தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக "இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்தியில், "மும்பை சாகா' என்ற படத்தில் நடித்துள்ளார். நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் "ஹே சினாமிகா' படத்திலும் காஜல் நடிக்கிறார்.
இதற்கிடையே தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் "ஆச்சார்யா' படத்தில் இருந்து த்ரிஷா விலகியதை அடுத்து, அந்த படத்திலும் காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு, தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுடன் திருமணம் முடிவாகியுள்ளது. இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் காஜல்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
""நான், கவுதம் கிட்சுலுவை திருமணம் செய்துகொள்ள இருக்கும் தகவலை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் திருமணம் வரும் 30 -ஆம் தேதி மும்பையில் நடக்க இருக்கிறது.
இது கரோனா தொற்று காலம் என்பதால் இரு குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொள்ளும் எளிமையான விழாவாக எங்கள் திருமணம் இருக்கும்.
இந்த திருமணம் எங்கள் மகிழ்ச்சியில் மெல்லிய வெளிச்சத்தைப் பரப்பி இருக்கிறது. நாங்கள் எங்கள் வாழ்க்கையை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
பல வருடங்களாக நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. எங்கள் புதிய பயணத்துக்கு உங்கள் ஆசிர்வாதங்களை நாங்கள் வேண்டுகிறோம். புதிய தேவையுடனும் அர்த்தத்துடன் நான் தொடர்ந்து என் ரசிகர்களை மகிழ்விப்பேன். உங்கள் முடிவில்லா ஆதரவுக்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.