துணிகளில் ஏற்பட்ட மஞ்சள் கறையைப் போக்க எலுமிச்சையால் அவ்விடத்தைத் தேய்த்தபின் சோப்பு போட்டு துவைத்து வெயிலில் காயப்போட்டால் கறை போய்விடும்.
பால், தயிர் பாத்திரங்களில் கறை நன்றாகப் பிடித்து விட்டால் தேய்ப்பது கடினம். ஆனால், பாத்திரத்தில் முக்கால்வாசி தண்ணீரை விட்டு, கொதிக்கவிட்டு, அரை மூடி எலுமிச்சம் பழச்சாறை விடவும். சில நிமிடங்களில் எல்லாக் கறைகளும் கரைந்து வந்து விடும்.
அழுக்கடைந்த செருப்புகளின் மீது இரவு டிஞ்சரைத் தடவி வைத்து மறுநாள் காலையில் அழுத்தித் துடைத்தால் அது பளிச்சென்று ஆகிவிடும்.
புளித்த மோரில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவைகள் புதியது போன்று பளிச்சிடும்.
வெள்ளைத் துணிகளில் டீ கொட்டி விட்டால் உடனே அதன்மேல் சீனியைத் தூவினால் கறைகள் போய்விடும்.
பட்டுப் புடவையில் எண்ணெய்க் கறை இருந்தால், சந்தனத்தை கறையின் மீது தடவி சிறிது நேரம் கழித்து அந்த இடத்தை மட்டும் அலச கறை போய்விடும்.
முட்டைகோஸ், உருளைக்கிழங்கு வெந்த பிறகு அந்த நீரில் வெள்ளிக் கொலுகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து பிரஷ்ஷால் சுத்தம் செய்தால் கொலுசு பளிச்சென்று ஆகிவிடும்.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
*தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். அப்படி செய்தால் தேங்காயில் ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது.
*ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி வெதுவெதுப்பான நீரில் போட்டு வைத்து பின் அத்தண்ணீரால் வீட்டைத் துடைத்தால் ஈ, எறும்பு அண்டாது.
*புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவுடன் கலந்து செய்தால் பஜ்ஜி மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்துவிடும்.
முட்டைக்கோஸ் நறுக்கும்போது அதில் உள்ள தண்டுகளை எறிந்து விடாமல் சாம்பாரில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
இஞ்சித் துண்டை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைத்து சாப்பிட்டால் வாய்க் கசப்பு நீங்கிவிடும்.
செவ்வாழைப் பழத்தை இரவு சாப்பிட்டு வந்தால் பல்வலி, ஈறுவீக்கம், பல்லில் ரத்தக் கசிவு, பல் சொத்தை வராது.
பச்சைப் பட்டாணியை வேக வைக்கும்போது அதில் 5 சொட்டு வினிகர் விட்டால். வெந்தபின்பும் பட்டாணி பச்சை நிறமாகவே இருக்கும்.
- எம்.எஸ்.லட்சுமி வாணி, முகப்பேர்.