தந்தையின் கனவை தன் கனவாக்கிக் கொண்டு சிறு வயதிலிருந்தே அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் அர்பிதா முரளிதரன். கேரளாவைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் உளவியல் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். தனது விடாமுயற்சியின் பலனாய் இந்த ஆண்டுக்கான சிறந்த தேசிய மாணவர் படை மாணவி ( கடற்படை) என்ற விருதை பிரதமர் நரேந்திர மோடி கையால் பெற்றுள்ளார்.
"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரளாவில்தான். கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்துள்ளேன். தேசிய மாணவர் படையில் சேர வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை. பள்ளியில் படிக்கும்போது ராணுவத்தில் இணைவதற்கு தேசிய மாணவர் படையில் சேர்வது ஒரு நல்ல ஆரம்பம் என்று அப்பா கூறுவார்.
தேசிய மாணவர் படையில் சேர வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் அதிகமாகிக் கொண்டே வந்தது. எனவே, தேசிய மாணவர் படை இருக்கும் கல்லூரியைப் பார்த்து சேர்ந்தேன்.
ஆளுமை வளர்ச்சி, தனித்திறமை, தொடர்புதிறன், குழு கலந்தாய்வு, பிரச்னைகளிலிருந்து மீண்டு வரும் திறன், இயற்கை பேரிடர் மற்றும் அவசரகால சூழலை எப்படி சமாளிப்பது எனப்பல பயிற்சிகள் என்.சி.சி.யில் அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு 20 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதில் நானும் ஒருத்தி. விருதுக்கான தேர்வு மிகக் கடினமாக இருந்தது. உயர் அதிகாரிகளுடன் உரையாடல், எழுத்துத் தேர்வு, குழு கலந்தாய்வு, இரண்டு வகையான அணிவகுப்பு போன்ற தேர்வுகள் நடைபெற்றது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் என்னை நானே ஊக்கப்படுத்திக் கொண்டு முன்னேறினேன். விருதுக்கு தேர்வானேன். இந்த விருதை என் பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் சமர்பிக்கிறேன்'' என்றார்.