கத்ரீனா திருமணம் கெடுபிடிகள்... நிபந்தனைகள்...!
By - கண்ணம்மா பாரதி | Published On : 15th December 2021 12:00 AM | Last Updated : 15th December 2021 12:00 AM | அ+அ அ- |

கத்ரீனா - விக்கி சேர்ந்து வாழ படு காஸ்டலியான மும்பை ஜுஹு பகுதியில் உச்ச ஆடம்பர பங்களாக்களைக் கொண்டிருக்கும் "ராஜ்மஹல்' அடுக்குமாடியின் எட்டாவது தளத்தில் உள்ள வீட்டை ஐந்து ஆண்டுகளுக்கு வாடகைக்கு விக்கி பிடித்துள்ளார்.
வாடகை முதல் மூன்று ஆண்டிற்கு மாதம் எட்டு லட்சம் மட்டுமே . நான்காவது ஆண்டில் 8.40 லட்சமும், ஐந்தாம் ஆண்டு 8.82 லட்சமும் தர வேண்டும். வீட்டிற்கு முன்பணமாக ஒன்றே முக்கால் கோடி ரூபாய் விக்கி கொடுத்துள்ளார்.
இந்தக் கட்டடத்தில் இன்னொரு பகுதியில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி அனுஷ்கா ஜோடி வாழ்ந்து வருகிறது.
கத்ரீனா திருமணம் ராஜஸ்தானில் ஜெய்ப்பூரிலிருந்து இரண்டரை மணி நேர பயண தூரத்தில் உள்ள "சிக்ஸ் சென்சஸ் ஃபோர்ட் பர்வாரா' என்ற ஏழு நட்சத்திர ஹோட்டலில் நடந்து முடிந்திருக்கிறது.
700 ஆண்டு பழமையான கோட்டையில் இந்த சொர்க்க ஹோட்டல் அமைந்துள்ளது. ஒரு நாள் அறை வாடகை முக்கால் முதல் ஒரு லட்சம் வரை. சென்ற அக்டோபர் 15 -இல் தான் இந்த விடுதி செயல்படத் தொடங்கியுள்ளது.
கத்ரீனாவுக்கு மூன்று அக்கா, மூன்று தங்கைகள். ஒரு தம்பி. பெரிய குடும்பம். அப்பா முகம்மது கைஃப். காஷ்மீர் வம்சாவளி. அம்மா ஸþஸன், இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இடையில் முகம்மது, மனைவி குழந்தைகளை விட்டுப் பிரிந்ததெல்லாம் பழங்கதை.
மதுரை உசிலம்பட்டியை அடுத்துள்ள தொட்டப்ப நாயக்கனூரில் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு "மவுண்ட் வியூ பள்ளி'யை ஸூஸன் நடத்தி வருகிறார் என்பது புதுக்கதை. கத்ரீனா அவ்வப்போது பள்ளிக்கு சத்தம் இல்லாமல் வருகை தருவதுடன் நிதி உதவிகளையும் செய்து வருகிறார்.
கத்ரீனா திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அவர்கள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு ஏகப்பட்ட கெடுபிடிகளை... நிபந்தனைகளைக் கத்ரினா- விக்கி போட் டிருந்தனர்.
திருமணத்திற்கு வருபவர்கள், திருமணத்தில் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள்... எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்று யாரிடமும் சொல்லக் கூடாது.
திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் தங்கள் மொபைலிலோ, காமிராவிலோ படங்கள் பிடிக்கக் கூடாது. முக்கியமாக திருமண தம்பதிகளுடன் செல்ஃபி எடுக்கக் கூடாது. மீறி எடுத்தால் கூட கல்யாணப் படங்களைச் சமூக வலைத்தளங்கள் உட்பட எந்த ஊடகத்திற்கும் பகிரக் கூடாது.
திருமணத்தில் கலந்து கொள்ள வரும் விருந்தினர்கள், திருமண அரங்கிலிருந்து திரும்பிப் போகும் வரை, வெளியே யாரையும் தொடர்பு கொள்ளக் கூடாது.
திருமணத்தில் கலந்து கொள்ள வரும் விருந்தினர் அனைவருக்கும் ரகசிய குறியீடு தரப்படும். அந்த ரகசிய குறியீடைச் சொல்லித்தான் திருமணம் நடக்கும் நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழையவே முடியும். என்பதெல்லாம் நிபந்தனைகள் . ஆனாலும் திருமணம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.