கேரளத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் வசிக்கும் செல்வி ஆர்யா ராஜேந்திரன் இன்று இந்தியாவின் கவனத்தைத் தன்பக்கம் திருப்பிக் கொண்டிருக்கிறார்.
வயது 21. கணிதம் இளங்கலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவி. ஆர்யா திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கேரளத்தில் நகராட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக ஆர்யா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பேசப்பட்டது.
"பட்டப்படிப்பு கூட முடிக்கவில்லை... அதற்குள் நகர மேயரா..' என்று ஆச்சரியப்பட்டவர்கள்தான் அதிகம்.
மலையாள நடிகர் மோகன்லாலின் பூர்வீக வீடு இருக்கும் வார்டில் ஆர்யா வெற்றி பெற்றுள்ளதால், மோகன்லால் அலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்ல மறக்கவில்லை.
இது குறித்து ஆர்யா கூறியதாவது:
""அப்பா அம்மா இருவருமே மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள். அப்பா எலெக்ட்ரிஷியனாக வேலை பார்க்கிறார். அம்மா "எல் ஐ சி' முகவர். இரண்டு அண்ணன்கள். வாடகை வீடுதான். நான் சிறுமியாக இருக்கும் காலத்திலிருந்து என்னை கட்சி கூட்டங்களுக்கு அப்பா அழைத்துச் செல்வார். பிறகு கட்சியின் குழந்தைகள் பிரிவான "பாலசங்கம்' அமைப்பில் உறுப்பினர் ஆனேன். இப்போது திருவனந்தபுரம் ஆல் செயின்ட் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.
அப்பா அம்மா மூலமாக அரசியல் எனக்கு அறிமுகம் ஆனது. பிறகு கட்சியில் என்னை நானே இணைத்துக் கொண்டு எனது பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். "பாலசங்கம்' அமைப்பின் மாநிலத் தலைவரானேன்.
ல்லூரியிலும் எனது கட்சிப் பணிகள் தொடர்ந்தது. கட்சியின் மாணவர் அமைப்பில் எனக்கு கிடைத்த அனுபவங்கள் என்னை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தன. பொதுமக்களிடம் எப்படிப் பேசிப் பழக வேண்டும் ... எப்படி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை விளக்கவேண்டும் என்ற பக்குவத்தை எனக்கு கற்றுத்தந்தன. அரசியலில் எனது ரோல் மாடல் கேரள முதல்வர் பினராயி விஜயன்தான். எனது வார்டிலிருந்து வளர்ச்சிப் பணியைத் தொடங்கி, அதை நகரம் முழுவதும் விரைவுபடுத்துவேன். திருவனந்தபுரம் நகரத்தின் கழிவுகளை உரியமுறையில் கையாளும் சவாலை எதிர்கொள்வேன்'' என்கிறார் ஆர்யா ராஜேந்திரன்.