சிறுநீரகத்தில் கல் உருவாகிறதா? - மாம்பழம் சாப்பிடுங்கள்!

ஒவ்வொருவருக்கும் உடலில் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளையும் இயற்கை முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்தி விட முடியும் என்று கூறுகிறார் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா சித்த மருத்துவமனையில்
சிறுநீரகத்தில் கல் உருவாகிறதா? - மாம்பழம் சாப்பிடுங்கள்!

ஒவ்வொருவருக்கும் உடலில் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளையும் இயற்கை முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்தி விட முடியும் என்று கூறுகிறார் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா சித்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என். ராதிகா. இவர், கரோனா மூன்றாம் அலையில் இருந்து நாம் எவ்வாறு இயற்கை முறையில் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

கரோனா மூன்றாம் அலை வர போகிறது என்பது யூகமா அல்லது வர வாய்ப்பு உள்ளதா என பலரும் கேட்கிறார்கள். உலக நாடுகள் அனைத்துமே கரோனா மூன்றாம் அலை உருவாக வாய்ப்பு இருப்பதாகத்தான் நம்புகிறார்கள். எனவே, மேலை நாடுகள் பலவும், இது எப்படி வரப்போகிறது , என்ன மாதிரி அறிகுறிகள் தென்படும் என்பதை எல்லாம் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மூன்றாம் அலை ஏன் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று சொல்கிறார்கள் என்றால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி வந்துவிட்டது. பெரும்பாலானோர் அதனை எடுத்துக் கொண்டுள்ளனர். எனவே, அவர்களை கரோனா அவ்வளவாக தாக்க வாய்ப்பு இல்லை. ஆனால், 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி வரவில்லை. அதனால்தான் குழந்தைகளை மூன்றாம் அலை அதிகம் தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பொதுவாகவே, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவேதான், குழந்தைகளை மூன்றாம் அலையில் இருந்து பாதுகாக்க பெற்றோர் அதிகளவில் கவனத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

கரோனா முதல் அலை, இரண்டாம் அலை ஏற்கெனவே நமக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. எனவே, மூன்றாம் அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள முதல் இரண்டு அலையிலும் என்னென்ன வழிமுறைகளை கையாண்டோமோ அதனைத் தொடர்ந்து செய்து வரவேண்டும். இரண்டாம் அலைதான் முடிந்துவிட்டதே, என அலட்சியமாக இருக்காமல், எங்கு வெளியே சென்றாலும் முகக் கவசம் அணிந்து செல்வது, வெளியே சென்று வந்ததும் கை, கால், முகத்தை கழுவுவது, என்பதை கட்டாயமாக செய்ய வேண்டும்.

அதுபோன்று நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் விட்டமின் சி, புரதசத்து , சிங்க் சத்துள்ள உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இதனை வழக்கப்படுத்திக் கொண்டாலே நாம் மூன்றாம் அலைக்கு பயப்பட வேண்டிய தேவையில்லை.

நீங்கள் ஒரு விஷயத்தை நன்கு யோசித்துப் பாருங்கள், கரோனா மட்டும்தான் நமக்கு புதிததாக வந்த வைரஸா? இதற்கு முன்பு டெங்கு வந்தது, சிக்கன்குனியா வந்தது. அவைகளும் வைரஸ் இனத்தை சார்ந்தவை தானே. அந்த நோய்களும் யார் யாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததோ அவர்களைத்தான் பாதித்தது. அதைப்போலத்தான் கரோனாவும். ஆனால், கரோனா உலகம் முழுவதும் பரவியதாலும், உயிர் இழப்புகளை ஏற்படுத்தியதாலும் மனிதர்களிடைய பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்திவிட்டது.
எனவே, மூன்றாம் அலை வருவதற்குள் வருமுன் காப்போம் என்ற ரீதியில் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும். தினமும், காலையில் எழுந்ததும், காபி , டீ அருந்துவதை தவிர்த்து விட்டு, மிளகு, சீரகம், வெல்லமோ, தேனோ, கருப்பட்டியோ சேர்த்த கொத்தமல்லி டீயோ, புதினா டீயோ அல்லது கற்பூரவல்லி டீ யோ என ஏதாவது ஒரு மூலிகை தேநீர் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை எனக்கு டீ, காபி தான் குடிக்க வேண்டும் என்பவர்கள் மூலிகை டீ அருந்திய 1 மணி நேரத்துக்குப் பிறகு, காபி, டீ எடுத்துக் கொள்ளுங்கள்.
தூங்கி எழுந்ததும், மூலிகை டீ எடுத்துக் கொண்டாலே நோய் எதிர்ப்பு சக்தி உடலில் மேம்படும். மேலும், வெறும் வயிற்றில் இந்த மூலிகை டீ அருந்தும்போது, நம் உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றிவிடும். இதனால் மலசிக்கல் பிரச்னையும் இருக்காது.
அதுபோன்று, காலையில் பெரும்பாலும் சிறுதானிய உணவுகள் எடுத்துக் கொள்ளுங்கள். தினமும், இட்லி, தோசைதான் சாப்பிடுவேன் என்பவர்கள், இட்லிக்கு, தோசைக்கு மாவு அரைக்கும் போதே, இரண்டு கைப்பிடி அளவு சிறுதானியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள், அப்போது நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவாகவும் இருக்கும். அதே சமயம், சிறுதானிய சத்தும் உங்கள் உடலில் சேர்ந்துவிடும். இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னி அரைக்கும்போது, அதில் ஒரு கைப்பிடி அளவு, கொத்துமல்லியோ, கறிவேப்பிலையோ சேர்த்து அரைத்து சாப்பிடுங்கள்.
அதுபோன்று, மதிய உணவில் பச்சை காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அலுவலக பணியில் இருப்பவர்கள், டீ, பஜ்ஜி, வடை என எடுத்துக் கொள்கிறார்கள். அதை தவிர்த்துவிட்டு, வீட்டில் இருந்து, முளைக்கட்டிய பயறு சுண்டலோ, பழ சாலட்டோ, காய்கறி சாலட்டோ, மோரோ, எலுமிச்சை இஞ்சி சேர்த்த ஜூúஸா எடுத்துச் செல்லுங்கள். இவற்றை பழகிக் கொண்டாலே எந்த அலையும் நம்மை எதுவும் செய்யாது.
ஏற்கெனவே, கரோனா பொதுமுடக்கத்தினால், ஜங்க் புட் சாப்பிடும் பழக்கம் குறைந்துவிட்டது. அது இல்லாமலே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் பழகிவிட்டோம். அதனால், மீண்டும் அந்த பழக்கத்துக்கு அடிமையாவதை தவிர்த்து விடுங்கள். அப்படியே சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் மாதத்துக்கு ஒருமுறையோ, இரண்டு முறையோ சாப்பிடுங்கள்.
அதைவிட்டுவிட்டு, இன்னைக்கு ஒருநாள்தானே சமோசா சாப்பிட்டேன், இன்னைக்கு ஒருநாள் தான் பரோட்டா சாப்பிட்டேன். இன்னைக்கு ஒருநாள்தானே பர்கர் சாப்பிட்டேன் என்று வாரம் முழுவதும் தினம் ஒன்றை எடுத்துக் கொள்ளாதீர்கள்.
அது தவிர தினசரி காலை எழுந்ததும், நடக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு பத்துநிமிடம் அமர்ந்தோ, நின்றபடியோ முதுகை நேராக வைத்துக் கொண்டு மூச்சு பயிற்சி செய்யுங்கள். யோகா செய்வதென்றால், சமூக வலைதளத்தை பார்த்து செய்யாமல், முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டு செய்யுங்கள்.
இப்போது எல்லா ஊர்களிலும் இலவசமாக யோகா பயிற்சியளிக்க யோகா மற்றும் நோச்சரோபதி மருத்துவமனைகள் இருக்கின்றன அங்குச் சென்று கற்றுக் கொள்ளுங்கள்.
அதுபோன்று சீசனுக்கு ஏற்றபடி கிடைக்கும் பழங்களை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்காகத்தான் அது இயற்கையாகவே, படைக்கப்பட்டிருக்கிறது. இப்போது, மாம்பழம் நிறைய கிடைக்கும். மாம்பழம் சூடு என்று ஒதுக்காதீர்கள். ஏனென்றால், மாம்பழம் அளவோடு எடுத்துக் கொள்பவர்களுக்கு கிட்னி கல் உருவாவது குறையும்.
சிம்பிளா சொல்ல வேண்டும் என்றால், நம்மை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறு சிறு உடற்பயிற்சி செய்ய வேண்டும் அவ்வளவுதான். இதனை தினசரி பழக்கத்தில் கொண்டு வந்தாலே கரோனா நம்மை ஒன்றும் செய்யாது. நாம் எந்த அலைக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com