வெங்காய ஊத்தப்பத்தில் வெங்காயத்தை போடும்போது இரண்டு பல் பூண்டையும் மெல்லிசாக சீவி போட்டு சுட வாயுத் தொல்லை நீங்கும். ரத்த கொதிப்புக்கும் நல்லது.
காய்கறிகளுடன் ஒரு கை பச்சை வேர்க்கடலை, பருப்பையும் சேர்த்து சாம்பார் செய்து பாருங்கள். சத்து மிகுந்ததும் சுவையானதுமான சாம்பார் ரெடி.
பழுக்காத தக்காளியுடன் ஒரு பழுத்த தக்காளியைப் போட்டு வைத்தால் அனைத்து தக்காளியும் விரைவில் பழுத்துவிடும்.
எந்த வகை கீரையானாலும் அடுப்பில் வேக வைக்கும்போது பாத்திரத்தை மூடி வைக்காமல் இருந்தால் கீரையின் நிறம் மாறாமல் சத்தோடு இருக்கும்.
சர்க்கரை பொங்கல் சூடாக இருக்கும்போதே அரை கிண்ணம் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கிளறி இறக்கினால் மிகவும் சுவையாக இருக்கும்.
ரவா தோசை செய்யும்போது இரண்டு தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென இருக்கும். சுவையும் கூடுதலாக இருக்கும்
உளுந்து வடை செய்யும்போது சேமியாத் தூள் போட்டு செய்தால் வடை மொறு மொறுவென இருக்கும்.
இது மாங்காய் சீசன் என்பதால் பாதி புளி, பாதி மாங்காய்த் துண்டுகள் போட்டு சாம்பார் வைத்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.
புளியோதரை சுவையாக இருக்க.. மல்லி இரண்டு தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, நிலக்கடலை இரண்டு தேக்கரண்டி மூன்றையும் ஒரு நல்லெண்ணெய்யில் வறுத்துப் பொடியாக்கவும். புளியோதரை கிளறியவுடன் இந்தப் பொடியை தேவையான அளவு தூவிக்கலந்தால் மணக்க மணக்கப் புளியோதரை ரெடி.
அடைமாவில் ஏதாவது கீரையை நறுக்கிப் போட்டுசெய்தால் சுவையும் சத்தும் கூடும்.
வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடி செய்து பக்கோடாவில் கலந்து செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
பாகற்காய் பொரியல் செய்யும்போது, அத்துடன் நறுக்கி வெங்காயம், தேங்காய்த் துருவல், வேக வைத்த பாசிப்பருப்புடன் பொரியல் செய்து இறக்கும்போது ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்க்க சுவையாக இருக்கும்.
கொத்துமல்லித் துவையல் புதினாத் துவையல் அரைக்கும்போது தண்ணீருக்குப் பதில் தயிர் சேர்த்தால் சுவை கூடும்.
முளைக்கீரையை உப்பு போட்டு வேக வைத்து தேங்காய், பச்சை மிளகாய் அரைத்துக் கலந்து இரண்டு கரண்டி புளிக்காத தயிர் விட்டு கடுகு தாளித்தால் கீரைப் பச்சடி மிகவும் சுவையாக இருக்கும்.