சளி, இருமல், தலைவலி...எளிமையான வீட்டு வைத்தியங்கள்!
நெஞ்சு சளி
தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு
சுக்கு, வால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை, சுக்கு, சீரகம், ஓமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகும். அல்லது வெற்றிலை, 4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜீரணக் கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து, அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜீரணமாவதோடு, உடல் குளிர்ச்சியடையும். அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி நீங்கும்.
கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த கஞ்சியில் சிறிதளவு உப்பையும், வெண்ணெய்யையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
பல் கூச்சம்
புதினா இலையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
தலைபாரம் நீங்க
கொத்துமல்லித் தழைகளை மிக்ஸியில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைபாரம் நீங்கும்.
வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.